திமுகவையும் சேர்த்து நாங்கதான் வளர்க்க வேண்டியிருக்கு - கோவையில் சீமான்
கோவை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்கிறோம். பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசியதில் துளி கூட நான் பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர சீமான் பேசியுள்ளார்.
பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகிறார். சீமானின் இந்த தொடர் சர்ச்சைப் பேச்சு திராவிட கட்சிகள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில், திக, திமுக, பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் சமீபத்தில் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்கிறோம். பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளார்கள் .
திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன?. பெரியாரை எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை. நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்திற்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு உலகம் முழுவதும் உள்ள சொந்தங்கள் பதில் சொல்வார்கள்.
நான் பிரபாகரனை சந்திக்கவில்லை. ஒருவர் 8 நிமிடம் தான் சந்தித்ததாக கூறுகிறார். ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என்று கூறுகிறேன். பாஜக ஏ டீம் திமுக, நான் பி டீம். பிரபாகரன் உடன் எடுத்த போட்டோ உண்மை என நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை. நானே பெரிய பவுன்சர் தான்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வார்கள் என்று எனக்கு தெரியும். இது மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராடியதற்கு கிடைத்த வெற்றி. இதனை வேறு யாரும் சொந்த கொண்டாட முடியாது. ஈரோடு தேர்தலில் நல்ல ஆண்மகனாக இருந்தால் சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என சொல்ல வேண்டும். பெரியார் திராவிடத்தின் குறியீடு, பிரபாகரன் தமிழின் அடையாளம்.
திமுகவில் சேர்ந்த யாராவது ஒருத்தரை பெரியார் யார் என்பது குறித்து பேச சொல்லுங்கள். பெரியார் பற்றி பேசி பொதுத் தளத்தில் வாக்கு சேகரிக்க பெரியாரை தூக்கிப் பிடிக்கும் கட்சிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு துணிவு உண்டா.
பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்று சக்தியாக வந்துள்ளேன். சூரியன் உதித்தால் தான் விடிவு வரும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications