அமைச்சர் எச்சரித்தும் ஆட்டம்! அதிகார மீறலில் கவுன்சிலர் கணவர்! கோவை மாநகராட்சியில் புதிய சர்ச்சை!
கோவை: கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்த கவுன்சிலரின் கணவர், சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகாரத்தில் அவரது குடும்பத்தினர் மூக்கை நுழைக்கக் கூடாது என அமைச்சர் கே.என்.நேரு பலமுறை எச்சரித்தும் யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை.
கோவை மாநகராட்சி ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 லட்சத்தில் எப்படி தொழில் தொடங்க முடியும்..மோடியின் முத்ரா திட்டம் நடைமுறையில் பயனற்றது-ப சிதம்பரம்
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி 61-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஆதி மகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி மீது புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார் என்பதும் தாம் சொல்லும் பணிகளை தான் இனி தனது மனைவி வார்டுக்குட்பட்ட பணியாளர்கள் செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்தார் என்பதும் அவர் மீது எழுந்துள்ள புகாராகும்.
எனக்கு தெரிவிக்கணும்
சுகாதாரப் பணியாளர்கள் தினமும் என்னென்ன வேலை செய்கிறார்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்கிறார்கள் என்ற விவரம் தனக்கு தெரிய வேண்டும் என அவர் கூறியதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனிடையே இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு பணியாளர் சங்கத்தினர், கவுன்சிலரின் கணவருக்கு இப்படி ஒரு அதிகாரத்தை யார் வழங்கியது என வினவியுள்ளனர். கோவை மாநகராட்சிஆணையர் இதில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர் எச்சரிக்கை
பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகாரத்தில் அவரது குடும்பத்தினரோ குறிப்பாக கணவர்களோ மூக்கை நுழைக்கக் கூடாது என பலமுறை அமைச்சர் நேரு எச்சரித்தும் கோவையில் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான காரணத்தையே சிதைக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளன.
மாநகராட்சி தரப்பு
இது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில், கோவை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஊடகங்கள் வாயிலாகதான் இந்த செய்தியை அறிந்து கொண்டோம். முழு விவரம் எங்களிடம் இல்லை என்று தெரிவித்தனர்.