'பாரத் மாதா கீ ஜே'.. மு.க.ஸ்டாலின் முன்பு கோஷமிட்ட இளைஞர்... கோவையில் பரபரப்பு
கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வருகை தந்தபோது பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை: கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது "பாரத் மாதா கீ ஜே" என்று கோஷமிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஈரோடு வந்திருந்தார். பிறகு விழா முடிந்து சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.
அங்கு திமுக தொண்டர்கள் ஸ்டாலினை பார்த்ததும் முழக்கமிட்டபடி வரவேற்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர், திடீரென "பாரத் மாதா கீ ஜே" என்று கோஷமிட்டார்.
இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோஷமிட்டவரை போலீசார் விமான நிலையத்திற்குள் உடனடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
டெல்லியை சேர்ந்த சரீஷ் ஹரி ஒம் என்ற இளைஞர்தான் இப்படி முழக்கமிட்டவர் என்பதும், பெங்களூரில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு டெல்லி செல்கின்றார் என்றும் தெரியவந்தது. முழக்கமிட்டபோது அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு, சோஃபியா என்ற இளம் பெண் "பாசிச பாஜக ஒழிக" என்று கோஷமிட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்.