"உள்ளே இருந்தது ஒன்றல்ல, 2 சிலிண்டர்!" கோவை கோயில் முன் வெடித்த கார்! ஸ்பாட்டில் சைலேந்திரபாபு ஆய்வு
கோவை: கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்துமோ என்று அஞ்சப்படுகிறது.
கோவை உக்கடம் பகுதியில் கார் ஒன்றில் இருந்த சிலிண்டர் யாரும் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவாகும் என்று அஞ்சப்படும் நிலையில், அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை
இன்று காலை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பு நின்று இருந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் நடந்ததால் உடனே சத்தத்தைக் கேட்டு பொதுமக்கள் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

கேஸ் சிலிண்டர்
அவர்கள் விரைந்து வந்த காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் காரில் இருந்த அந்த நபர் அப்படியே தீயில் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் அப்படியே இரண்டாகப் பிளந்து உள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை
காரில் உள்ள சிலிண்டர் வெடித்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன், அருகே கோவில் இருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஏடிஜிபி தாமரைக்கண்ணனும் நேரில் சென்று ஆய்வு செய்தார். போலீசார் இப்போது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

சைலேந்திர பாபு
கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதற்றமான சூழல் இருந்த நிலையில், இப்போது தான் மெல்ல அமைதியான சூழல் திரும்பி வருகின்றது. இந்தச் சூழலில் இந்தச் சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்துமோ என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே இது குறித்து ஆய்வு செய்ய டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் இருந்து கோவைக்கு விரைந்தார்.

யார் அவர்
காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உள்ளே இருந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார். இருப்பினும், இதுவரை அந்த நபர் யார் என்பதை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு சிலிண்டர்கள்
சம்பவ இடத்தை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கார் வெடித்தது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்.. காரில் இருந்த இரண்டு சிலிண்டர்களில், ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது. சிலிண்டர் எங்கிருந்து வாங்கப்பட்டது, இறந்த நபர் யார் என விசாரித்து வருகிறோம்.

உயிரிழந்தவர் யார்
உயிரிழந்தவர் யார் என்பது குறித்து அடையாளம் காண முயன்று வருகிறோம். அவர் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். அந்த காரை பல பேர் வைத்து இருந்து உள்ளனர். காரின் தற்போதைய உரிமையாளரைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளோம். மொத்தம் 6 குழுக்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. என்ஐஏ-க்கு தகவல் தெரிவிப்பது குறித்து புலன் விசாரணைக்குப் பின் முடிவு செய்யப்படும்" என்றார்












Click it and Unblock the Notifications