கோவை மக்களே சொந்த ஊருக்கு போறீங்களா?.. பேருந்து நிலையங்கள் மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க
கோவை: தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்வதற்காகவும் கோவையில் முக்கிய பேருந்து நிலையங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி என்றாலே குதூகலத்துக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்துடன் புத்தாடை அணிந்து, இனிப்புகள் செய்து, பட்டாசு வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தொழில், வேலை, கல்வி என பல்வேறு பணிகளுக்காக வெவ்வேறு ஊர்களில் வசிப்போர் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை பல்வேறு பகுதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்படுவது வழக்கம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் பெரிய தொழில் நகரமாக விளங்கி வருகிறது. ஐடி துறை, கல்வி, தொழில் என பல்வேறு பணிகளுக்காக இந்த மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வசித்து வருகின்றனர்.
அதேபோல, பல்வேறு மாவட்ட மக்களும் கோவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக்க காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் தீபாவளி கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோ கோட்டத்தின் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்டநெரிசலை தவிர்க்க கோவை மண்டலத்தில் கீழ்க்கண்டவாறு பேருந்து நிலைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருத்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலும், கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலும், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலும், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் கோத்தகிரி செல்லும் பேருத்துகள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளன.
இந்த தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை செயல்படவுள்ளன. அக்டோபர் 28 முதல் 31 ஆம் தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், கோவை - மதுரைக்கு 210 பேருந்துகள், கோவை - திருச்சிக்கு 100 பேருந்துகள், கோவை - தேனிக்கு 100 பேருந்துகள், கோவை - சேலத்துக்கு 240 பேருந்துகள், ஈரோடு - மதுரைக்கு 90 பேருந்துகள், ஈரோடு - திருச்சிக்கு 60 பேருந்துகள், திருப்பூர்- மதுரைக்கு 110 பேருந்துகள், திருப்பூர் - திருச்சிக்கு 170 பேருந்துகள், திருப்பூர் - தேனிக்கு 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், கோவை மண்டலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ள சூலூர் பேருந்து நிலையத்துக்கு காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications