அண்ணாமலை தோற்றதால்.. கோவையில் ஆடு பிரியாணி போட்ட திமுகவினர்
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்ததை அடுத்து கோவையில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாடியுள்ளனர்.
கோவை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் எல்லாம் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார்.
திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 4,18,825 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை
334695 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 172841 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 21,816 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 84130 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட முன்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து அண்ணாமலை பின்தங்கி வரும் நிலையில் திமுக வேட்பாளரின் வெற்றியை கோவை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். அதிலும் கொங்கு பெல்ட் அதிமுகவின் கோட்டை என கூறப்பட்டு வந்த நிலையில் அங்கு அதிமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனாலும் திமுகவினர் உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து கோவை மாநகர மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் காந்திபுரத்தில் அண்ணாசிலை முன்பு திரண்ட திமுகவினர் பட்டாச்சு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் கோவை உக்கடம் , கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் திரண்டு வந்தனர்.
அங்கு 2 ஆடுகளை கயிற்றால் கட்டி வைத்து பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கினர். அண்ணாமலை தான் கையில் கட்டியிருந்த விலை உயர்ந்த வாட்ச் குறித்து கேட்ட போது அவர் தனக்கு இரு ஆட்டுக் குட்டிகள் இருப்பதாகவும், கார் கூட சொந்தமாக இல்லை என்றும், வீட்டு வாடகையை நண்பர்கள்தான் செலுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார். இதனால் திமுகவினர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என அழைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஆட்டை பிரியாணி போடுவீங்களோ என்னமோ அந்த ஆட்டை தயவு செய்து கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடுங்கள். அதுதான் என் வேண்டுகோள் என ஒரு முறை கோவையில் அண்ணாமலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications