S.P.வேலுமணியை சந்தித்தது ஏன்?.. பேசியது என்ன?.. செந்தில் பாலாஜி பரபர விளக்கம்..!
கோவை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. செந்தில் பாலாஜியை கோவையில் போட்டியிட வைத்தனர். செந்தில் பாலாஜி வெற்றி பெற்றாலும், கோவையில் எதிர்பார்த்த வெற்றி அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த வாரம் அதிமுக முன்னாள் எஸ்.பி. வேலுமணியை செந்தில் பாலாஜி சந்தித்து பேசியது பரபரப்பானது. வேலுமணியிடம் பேசியது என்ன என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியிளித்தார். அப்போது அவர், "ஊடகங்கள், பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் இப்போது தான் புதிதாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டதை போல சொல்கின்றனர். இந்த அரசு அமைந்த உடன் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுவதைப் போல செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஊடகங்கள் உள்ளதை உள்ளபடி செய்திகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

ரீல்ஸ் ஆட்சி
கடந்த திமுக ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டன. அதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டன. ஏதோ புதிதாக இந்த புதிய அரசு மட்டுமே 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது என்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் கடந்த கால சம்பவங்களையும் நினைக்க வேண்டும்.
இவர்கள் பூரண முழு மதுவிலக்கு கொண்டு வந்தது போல சொல்ல கூடாது. ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது. உண்மையான மாற்றம் என்ன, இனி நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவர்களால் அப்படி என்ன மாற்றம் கொண்டு வர முடியும்.
தமிழகம் நம்பர் 1
இந்தியாவில் தொழில்துறையில் தமிழகம் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதில் என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள். உயர்கல்வி துறையில் தமிழகம் நம்பர் ஒன், மருத்துவத்துறையில் இந்திய அளவில் தமிழகம் நம்பர் ஒன். பொருளாதார அளவில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளோம். இதில் இவர்கள் என்ன மாற்றம் கொண்டு வரப் போகிறார்களாம்.
மாற்றம் என்றால் அதில் கொள்கை ரீதியாக ஒரு முடிவு இருக்க வேண்டும். இவற்றில் எல்லாம் மாற்றம் கொண்டுவர போகிறோம் என்று ஆளுங்கட்சி வாக்குறுதி கொடுக்கவில்லை. குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் மட்டும தான் மாற்றம் மாற்றம் என்கின்றனர். என்ன மாற்றம் என்பதை சொன்னால் தான் பதில் சொல்ல முடியும்.
வேலுமணியுடன் சந்திப்பு
திமுக ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாக கொண்டு வந்ததை இவர்கள் தக்க வைத்தாலே போதும். இந்த நிலையை விட அடுத்த நிலைக்கு அழைத்து சென்றால் பாராட்டுக்குரியது. இதில் இருந்து தமிழகத்தை பின் நோக்கி அழைத்து செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் சூழலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்புகளை இந்த அரசு எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பார்க்கலாம். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. கையெழுத்து போடும் இடத்தில் எதார்த்தமாக சந்தித்து பேசினோம். அவ்வளவு தான்" என்றார்.












Click it and Unblock the Notifications