கொங்கு மண்டலமே ஆடிப்போச்சு.. பூத் வாரியாக 1.5 லட்சம் மகளிரை திரட்டிய கனிமொழி.. மாஸ் காட்டிய திமுக!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக நடத்திய வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஏற்கனவே வடக்கு மண்டலத்தில் இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது கொங்கு மண்டலத்தில் மகளிர் மாநாட்டை நடத்தி திமுக திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக தேர்தலுக்கு தயாராகி வருவது பல்வேறு கட்சிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் சமூக ரீதியாக மாற்று கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் திமுக பக்கம் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல் கூட்டணியையும் முதல்வர் ஸ்டாலின் இணக்கமாக வைத்திருக்கிறார்.

தவெக பக்கம் சென்றுவிடுவோம் என்று காங்கிரஸ் கட்சி போக்கு காட்டினாலும், நேரடியாக ப.சிதம்பரத்தை சந்தித்து சிக்கலை முடித்திருக்கிறார். அதேபோல் அதிமுக கூட்டணி பலப்பட்டுவிடக் கூடாது என்று தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. இதனிடையே விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், இளைஞர்கள் மற்றும் மகளிர் வாக்குகள் குறைந்துவிடும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் வடக்கு மண்டலத்தில் இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் திமுக திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் பல்லடத்தில் மகளிர் மாநாட்டை திமுக பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறது. திமுகவின் 13 மாவட்டங்களில் இருந்து 39 சட்டசபைத் தொகுதிகளுக்கு உட்பட 1.5 லட்சம் மகளிர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு 6 மாவட்டங்களில் இருந்த பூத்திலும் 10 முதல் 15 பெண் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு அவர்களுக்கு மிக்சர், இனிப்பு, குளிர்பானம், தண்ணீர் பாட்டில், ரஸ்க் அடங்கிய திமுகவின் சிற்றுண்டி தொகுதி பைகள் அளிக்கப்பட்டன. கனிமொழி தலைமையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு மிகச்சிறப்பாகவே நடத்தப்பட்டிருந்தது.
தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் செல்வாக்குடன் வலம் வரும் கனிமொழி, பல்லடத்தில் மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தாலும், எந்தவொரு சிக்கலும் இல்லாமல் கனிமொழி இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறார்.
ஏற்கனவே மகளிருக்கான விடியல் பேருந்து திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவை மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த திட்டங்களை மகளிரிடம் கொண்டு செல்லும் வகையில் திமுகவினர் செயல்பட தொடங்கி இருக்கின்றனர். கொங்கு மண்டலத்திலேயே இவ்வளவு பெரிய கூட்டத்தை திமுக கூட்டிருப்பது அதிமுக மற்றும் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் திமுக 24 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனை இம்முறை இரட்டிப்பாக்கும் வகையில் திமுக செயல்பட்டு வருகிறது. அதற்காக ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக கூடுதல் கவனம் செலுத்தி வரும் சூழலில், இந்த மகளிர் மாநாடு திமுகவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications