"மாட்டு கோமியம் மருந்துதானே" இந்தா புடிங்க.. சென்னை ஐஐடி இயக்குனருக்கு எதிராக செய்த வேலையை பாருங்க
கோவை: மாட்டு கோமியம் மருத்துவ குணம் கொண்டது என்ற சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் பேச்சு பெரும் பேசுபொருளானது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல்களை எழுப்பினர். இந்நிலையில், சென்னை ஐஐடி இயக்குநருக்கு கோவையில் இருந்து கோமியத்தை தபால் மூலம் அனுப்பும் போராட்டத்தில் திராவிடத் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.
புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும், உயர்தர சிகிச்சை முறைகளாலும் சாதனை படைத்து வருகிறது இந்திய மருத்துவத் துறை. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி, மாட்டின் கோமியத்தை குடிப்பதன் மூலமாக உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கலாம், அந்த சக்தி கோமியத்தில் உள்ளது. கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். அஜீரண கோளாறு சரியாகும் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மாட்டு கோமியம் குறித்த அவருடை இந்த கருத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோமியம் குறித்து கருத்து தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு கோமியம் அனுப்பும் போராட்டத்தில் திராவிட தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.
திராவிடர் தமிழர் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆதித்தமிழன் தலைமையில் 8 பேர் கொடிகளையும், கோமியத்தையும் ஏந்தியவாறு கொண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்திய தபால் நிலையத்தில் இருந்து அனுப்ப சென்றபோது முதலில் இதுபோன்ற பொருட்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது என அலுவலக ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
அதன் பிறகு தலைமை தபால் நிலைய அதிகாரியிடம் தொலைபேசி வாயிலாக திராவிட தமிழர் கட்சியினர் பேசினர். இதையடுத்து கோமியத்தை சிறிதளவும் சிந்திவிடாத வகையிலும், சிந்தினாலும் வெளியே வராத வகையில் பேக்கிங் செய்ய அறிவுறுத்தினர். மாற்று முறையில் பேக்கிங் செய்து 700 மில்லி லிட்டர் கோமியத்தை சென்னை ஐஐடி இயக்குனருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதித்தமிழன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் இருந்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு மாட்டு கோமியம் தபால் மூலமாக அனுப்பியுள்ளோம். அதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து மகளிர் அணி சார்பில் வானதி மற்றும் தமிழிசைக்கு கோமியம் அனுப்ப உள்ளோம்.
மாட்டுக்கறி உண்பவர்கள் கோமியம் குடிக்க மாட்டார்களா என தமிழிசை முன்வைத்த கருத்துக்கு, மாட்டுக்கறி எங்களுக்கு தேவை என்பதால் உண்கிறோம். நாங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறக் கூடாது. அறிவியல் ரீதியாக மாட்டு கோமியம் நச்சுத்தன்மை கொண்டது என ஆய்வுகள் உள்ளன. தமிழிசை விருப்பப்பட்டால் அவருக்கு மாட்டுக்கறியை அனுப்பி வைக்கவும் தயார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications