கோவை, நீலகிரிக்கு புது தலைவலி.. குடத்துடன் தெருவில் இறங்கிய மக்கள்! தலைத்தூக்கிய குடிநீர் பிரச்சனை
கோயம்புத்தூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்த அளவில் வழக்கமாக ஏப்ரல் தொடக்கத்தில்தான் வெயில் தீவிரமடையும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சூடேறிய வெயில் மார்ச் மாதத்தில் சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாக தொடங்கியது. அதேபோல ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயில் பதிவாகியது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் 28ம் தேதியன்று 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. அதேபோல கொங்கு மாவட்டங்களிலும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது. எனவே ஈரோடு மட்டுமல்லாது கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு எழுந்திருக்கிறது. எனவே மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மக்கள் கூறுகையில், "எங்களுக்கு இங்கே கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். குடிநீர் குழாய்களில் நீர் விநியோகிக்கப்படுவதில்லை என்பதால், லாரிகளில் சிலர் தண்ணீரை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தினமும் காசு கொடுத்து எங்களால் தண்ணீரை வாங்க முடியாது.
பொது குழாயில் தண்ணீர் விநியோகம் செய்வதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். முன்பு 10 ரூபாய்கு விற்றுக்கொண்டிருந்த அரை லிட்டர் வாட்டர் பாட்டில் இப்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு நீர் தேக்க தொட்டியை கட்ட தொடங்கினார்கள். ஆனால் இப்போது வரை அதை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை.
எங்களுக்கு ஒரு நாள் கூலியே ரூ.250தான். ஆனால், 20 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருந்தால் எங்களால் சமாளிக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "கோவை மாநகராட்சியின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிறுவாணி மற்றும் பில்லூர் அணை இருக்கிறது. இந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. எனவே, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பில்லூர் அணையிலிருந்து நீர் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சிறுவானி அணைகளிலிருந்து ஓரளவுதான் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய மேல் பவானியிலிருந்து கேரளா வழியாக தண்ணீர் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளனர்.
மறுபுறம் நீலகிரியிலும் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் 36 ஆவது வார்டு லவ்டேல் பகுதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை வார்டு உறுப்பினரிடமும் முறையிட்டும் எந்த ஒரு பயணம் இல்லை எனவும் குடிநீருக்காக இரண்டு பகுதி மக்கள் இடையே மோதல் ஏற்பட கூடும் எனவும் விரைந்து இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தண்ணீர் இல்லாததால் மாடுகள் கொத்து கொத்தாக உயிரிந்துள்ளன. நீலகிரியின் மசினகுடியில் மேய்ச்சலுக்கு சென்ற வளர்ப்பு மாடுகள் வெயிலின் தாக்கத்தாலும், போதிய நீர் கிடைக்காததாலும் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன.
எனவே நீலகிரி, கோவை மாவட்ட சேர்ந்தவர்கள், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது கால்நடைகள், வன விலங்குகளுக்கான நீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications