கோவை போலீஸ் எடுத்த சாமர்த்தியமான முடிவு.. உக்கடம் மேம்பாலத்தில் ஒரே நாளில் மாறிய காட்சிகள்
கோவை: கோவை உக்கடம் மேம்பாலத்தை திறந்த அன்றே, அதில் வரும் அனைத்து வாகனங்களும் இறங்கும் பகுதியில் ஒன்றாக சேருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டனர். இதையடுத்து கோவை போக்குவரத்து போலீசார் சின்னதாய் மாற்றியோசித்த காரணத்தால் போக்குவரது நெரிசல் குறைந்துள்ளது. உக்கடம் மேம்பாலத்தில் இப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இல்லை..
கோவையில் உக்கடம் என்பது நகரின் முக்கியமான வணிகப்பகுதியாகும். ரயில் நிலையம், பேருந்துநிலையம், வணிக நிறுவனங்கள், கேரளாவிற்கு செல்லும் வழி, பொள்ளாச்சி செல்லும் வழி, நகரின் ஒரு பாதி மக்கள் இன்னொரு பகுதிக்கு செல்லும் வழி என முக்கியமான இடமாக திகழ்கிறது. இங்கு எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலையில் பீக் அவர்ஸில் இந்த சாலையில் வெறும் 4 நிமிடத்தில் போக வேண்டிய பாதையை கடக்க அரை மணி நேரம் வரைகூட ஆகும்.

இதையடுத்து உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.481 கோடியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யபட்டது. இந்த பாலம் கட்டுமானப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு வீச்சில் நடந்தது. இப்பாலம் கடந்த 9-ந்தேதி முதல்வர் ஸ்டாலினால் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப் பட்டது. இந்த மேம்பாலத்தில் இருந்து சுங்கம் சாலைக்கு செல்லும் பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுவதும் இந்த மாதம் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்கடம் மேம்பாலம் திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்ப்பு அதிகமானது. எதிர்பார்த்தபடியே உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடு பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் உக்கடம் மேம்பாலத்தில் ஏறி மீன்மார்க்கெட் அருகே இறங்கின. அந்த இடத்தில் அனைத்து வாகனங்களும் ஒன்றாக இறங்கும் போது நெரிசல் ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உக்கடம் பஸ்நிலையம் வழியாக வரும் வாகனங்களும் சேரும் இடமாக இருந்ததால் நெரிசலை மிகவும் அதிகமாக்கியது. இதனால் உக்கடம் போலீஸ் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்ளாக போக்குவரத்து நெரிசல் கார ணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட மேம்பாலத்தால் என்ன பயன் என்று வாகன ஓட்டிகள் நொந்துகொண்டனர். வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேம்பாலம் அமைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் நெரிசலை குறைக்க மாற்றுவழிகளை யோசித்தார்கள்.
ஏனெனில் தற்போதைய நிலையில் மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் பணிகள் முடிவடைந்து போக்குவரத்துக்கு திறக்கும் போது தான் உக்கடம் பாலத்தால் நெரிசல் குறையும் என்கிற நிலை உள்ளது. இதை அறிந்த போலீசார், தற்காலிக ஏற்பாடுகளை யோசித்தனர். இதன்படி பஸ்கள் அனைத்தும் மீன் மார்க்கெட் அருகே திருப்பி விடப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் நெரிசல் குறைந்து வாகனங்கள் தற்போது எளிதாக செல்கின்றன. சின்னதாய் மாற்றியோசித்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது கோவை சம்பவம் உதாரணமாகும்.











Click it and Unblock the Notifications