‛‛தங்கவாள்’’.. எடப்பாடிக்கு சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் விருது வழங்கல்.. கொடுத்தது யார் தெரியுமா
கோவை: கோவையில் இன்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் எனும் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணியில் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த 2 கட்சிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இரு கட்சி தலைவர்களும் பொதுவெளியில் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தது. அதோடு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தனது தலைமையில் கூட்டணி அமைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டணியில் பாஜகவை இணைக்காமல் இருக்க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாஜகவை கழற்றிவிட்டுள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையில் உள்ளார். அதோடு சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கோவை கருமத்தம்பட்டியில் இன்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா இன்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் நோவா யுவணராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த வேளையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் எனும் விருது வழங்கப்பட்டது. முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கிரேன் மூலம் 10 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டது. கிரேன் மூலம் இந்த மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிவிக்கப்பட்டது. அதோடு அதிமுகவினர் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கவாள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications