சதிச்செயல்.. கோயில் பணத்தில் கல்லூரி கட்டலாமா.. எந்த விதத்தில் நியாயம்? கேட்கும் எடப்பாடி பழனிசாமி
கோவை: தமிழ்நாட்டில் கோயில் நிதிகளை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று கூறிய அவர், கோயில் பணத்தில் கல்லூரிகளை கட்டுவது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2வது நாளான நேற்று கோவை மாநகரப் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இதனிடையே கோயில் பணத்தில் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது. இதுதொடர்பான எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி பலமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூட்டணியை நம்புகிறார். ஆனால் நாங்களோ மக்களை நம்புகிறோம். திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று தெரியாத அளவுக்கு தேய்ந்துவிட்டது.
திமுக கூட்டணி
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்றால் எப்படி மீட்பீர்கள் என்று கேட்கிறார். நாங்கள் தேர்தல் மூலமாகத்தான் தமிழகத்தை மீட்போம். முத்தரசனின் கட்சியைப் போல எங்கள் கட்சி இல்லை, எங்களிடம் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக கூட்டணியில்தான் பிரச்சனை உள்ளது.
அடிமை சாசனம்
சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தற்போது திமுகவைத் தாக்கி அடிக்கடி பேசுகிறார். மக்கள் பிரச்சனையை திமுக தீர்க்கவில்லை என்கிறார். இப்படியே போனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிறார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சி மக்களைப் பற்றி சிந்திப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்தக் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டனர்.
அறநிலையத்துறை பணம்
தற்போது அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களை கண்டாலே திமுகவினருக்கு பிடிப்பதில்லை. அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர். மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை விரிவாக்கம் செய்வதற்குத்தான்.
கல்லூரிகள் கட்டுவது நியாயமா?
நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளைக் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை அதிமுக ஒரு சதிச் செயலாக பார்க்கிறது. கல்விக்கு செலவிட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அரசுப் பணத்தில் இருந்துதான் கல்விக்கு செலவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சிற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சட்டத்தில் இடமிருக்கிறதா?
இதனிடையே கோயில் நிதியில் கல்லூரிகள் கட்டலாமா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. சட்டப்பிரிவு 66(1)(g)ன் கீழ், கோவில்களில் உள்ள கூடுதல் உபரி நிதிகளை அல்லது "பொது நல நிதியை" பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை நிறுவுவதும் பராமரிப்பதும் அனுமதிக்கப்படுகிறது. இந்த பிரிவு, 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 38 மூலம் திருத்தப்பட்டு, இணை ஆணையர் மற்றும் துணை ஆணையருக்கான அறிவுறுத்தல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications