என்னை 24 மணி நேரமும் தொண்டர்கள் சந்திக்கலாம்! ஸ்டாலினை அப்படி சந்திக்க முடியுமா? -எடப்பாடி பழனிசாமி
கோவை: தன்னை 24 மணி நேரமும் நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்திக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலினை அவ்வாறு யாரும் சந்திக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை என்றும் ஆதாயம் தேடி அவர் திமுகவுக்கு சென்றிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
சரித்திரம் படைத்த திமுக அரசு.. முதலில் தினகரன் தன்னை காத்துக் கொள்ளட்டும்- எடப்பாடி பழனிசாமி அட்டாக்
கோவையில் எடப்பாடி
கோவை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகி செந்தில் கார்த்திகேயன் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை கோவை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்திருந்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதேபோல் கட்சியினரையும் பெருமளவில் திரட்டி எடப்பாடி பழனிசாமியின் மனதை குளிர்வித்தார் எஸ்.பி.வேலுமணி.
ஆறுகுட்டி திமுகவில்
எடப்பாடி பழனிசாமி கோவை வந்த தருணத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார். இதையடுத்து அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை என பளிச் பதில் அளித்தார். மேலும், தற்போது அதிமுக ஆளுங்கட்சி இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதாயம் தேடி சென்றிருக்கிறார் என விமர்சித்தார்.
வேடந்தாங்கல் பறவை
வேடந்தாங்கல் பறவையை போல் ஆறுகுட்டி இடம் மாறிக்கொண்டே இருப்பார் என மிகவும் கூலாக கூறினார். மேலும், தன்னை 24 மணி நேரமும் நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்திக்கலாம் என்றும் ஸ்டாலினை அவ்வாறு யாரும் சந்திக்க முடியாது எனவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த ஆறுகுட்டி இனி மேல் முதல்வர் ஸ்டாலின் வீட்டு கேட்டை கூட தொட முடியாது எனவும் தெரிவித்தார். இன்றோடு சரி இனி அடுத்து ஸ்டாலினை அவரால் நெருங்கவே முடியாது எனத் தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம்
எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேட்டி அளித்திருந்தாலும் கூட ஆறுகுட்டி திமுகவுக்கு சென்றது அதிமுகவை பொறுத்தவரை ஒரு இழப்பாகவே கருதப்படுகிறது. ஏனெனில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்சிக்கு அப்பாற்பட்டு தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி வைத்திருப்பவர் ஆறுகுட்டி என்பது இங்கு கவனிக்கத்தக்கது.