கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடிக்கு வைக்கப்பட்ட செக்.. செங்கோட்டையன் திடீரென எதிர்க்க காரணம் என்ன?
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எழுந்துள்ள அழுத்தம் மிக முக்கியமான செக்காக பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்து வந்த சூழலில், தற்போது ஈரோட்டில் இருந்து எதிர்ப்புக் குரல் எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. செங்கோட்டையனின் இந்த எதிர்ப்புக்கு யார் காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுகவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு கொங்கு மண்டலம் மிகப்பெரிய ஆதரவை கொடுத்திருந்தது. ஆனால் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் காரணமாக தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சிக்கலை அதிமுக சந்தித்தது.

இதன்பின் ஓபிஎஸ் விலகல் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்தை பிடித்தது. இதன் மூலமாக தென் மாவட்டங்களில் அதிமுக தனது பிடியை இழந்துவிட்டதாக கருதப்பட்டது.
இதனால் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போதும் கூட, கொங்கு மண்டலத்தில் இருந்தே தொடங்கினார். அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எதிர்ப்புக் குரலை எழுப்பி இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா மீண்டும் அரவணைத்து சென்றதை போல், எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கொந்தளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இணைப்புக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் முகாம்களில் இருந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துக்கள் வந்துள்ளன. இதனால் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதி மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி சென்று செங்கோட்டையன் பாஜக தலைவர்களை சந்தித்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே எஸ்பி வேலுமணி அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து அவருக்கு முருகன் சிலை ஒன்றை பரிசாக வழங்கினார். அப்போதே எஸ்பி வேலுமணி கட்சி மாறப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறி இருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் செங்கோட்டையனை பின் நின்று பாஜக இயக்குகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பாஜக எப்போதும் 2வது இடத்தில் இருக்கும் தலைவர்களை குறி வைப்பது வழக்கம். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை போல், அதிமுகவில் ஓபிஎஸ் இருந்து வந்தார். தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் மூலமாக பாஜக வளர்ச்சி பெற்றது.
இதன்பின் எஸ்பி வேலுமணி பாஜகவுடன் உறவு கொண்டாடி வந்த நிலையில், தற்போது செங்கோட்டையனும் பாஜக வசம் சிக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அதிமுகவின் முக்கிய தலைவரான செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு ஒப்புக் கொள்ள வைக்க பாஜக செக் வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications