கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்குள் நுழைந்த யானை உயிரிழக்கவில்லை - ஹைகோர்ட்டில் வனத்துறை அறிக்கை
கோவை: கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி கோவிலுக்குள் நுழைந்த யானை உயிரிழக்கவில்லை என்றும், அழுகிய நிலையில் இறந்து கிடந்த யானை வேறொரு யானை என்றும் உயர்நீதிமன்றத்தில் வனத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மலை அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும்.

இந்நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் அக்டோபர் முதல் வாரத்தில் திடீரென காட்டு யானை ஒன்று நுழைந்தது. கோயிலுக்குள் யானை நுழைந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. பார்க்கவே மிகவும் கம்பீரமாக தோற்றமளித்த அந்த யானை கோயிலுக்குள் நுழைந்த இரண்டு நாட்களில் உயிரிழந்தது.
மிகவும் நன்றாக இருந்த யானை எப்படி இறந்தது என்ற கேள்வி எழுந்து வந்தது. ஆனால், யானை உயிரிழப்புக்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உயிரிழந்த யானையின் உடலுறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பப்படவில்லை. யானை உயிரிழப்பு குறித்தும் தெரியப்படுத்தாமல் பிரேதப் பரிசோதனை செய்து யானை புதைக்கப்பட்டதாக சென்னை கோட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களைப் பார்க்கும்போது யானை கோயிலுக்குள் நுழைந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளது. எனவே, யானை இறந்ததற்கான காரணம் குறித்த விவரங்களுடன் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை தமிழக வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அக்டோபர் 10 ஆம் தேதி போலுவாம்பட்டி வன கிராமத்தில் அழுகிய நிலையில் ஆண் யானை இறந்து கிடந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவரைக் கொண்டு அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு தந்தங்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அழுகிய நிலையில் இருந்ததால் அதன் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரிக்கவில்லை. இந்த யானை 10 முதல் 17 நாட்களுக்கு முன் இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். வெள்ளியங்கிரி கோவிலுக்குள் அக்டோபர் 2 ஆம் தேதி தான் காட்டு யானை நுழைந்தது. அக்டோபர் 10 ஆம் தேதி அழுகிய நிலையில் யானை உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் கோவிலுக்கு வந்த யானை தான் இது என்று உறுதியாகக் கூற முடியாது. ஆய்வு மேற்கொண்டதில் கோவிலுக்கு வந்த யானை உயிரிழக்கவில்லை என்பதும், உயிரிழந்தது வேறு யானை என்பதும் தெரியவந்துள்ளது.
கோவை வனச் சரகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 232 யானைகள் உயிரிழந்துள்ளன. அதாவது ஆண்டுக்கு 15 யானைகள் என்ற விதத்தில் இறந்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையில் எட்டு யானைகள் மட்டுமே இறந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் 23 யானைகள் இறந்துள்ளன. 232 யானைகளில் 30 யானைகள் மட்டுமே இயற்கைக்கு மாறாக இறந்துள்ளன. மீதமுள்ள யானைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இயற்கையான முறையில் இறந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications