செங்கோட்டையன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு.. கூண்டோடு ராஜினாமா செய்த 2,000 அதிமுக நிர்வாகிகள்!
ஈரோடு: அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் தாங்கள் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், கோபிசெட்டிப்பாளையம் நிர்வாகிகள் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று நேற்று பேசி இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த அதிமுக என்ற பிரச்சனைக்கு முடிவு வந்தால் தான் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வேன் என்று கூறிய அவர், அதற்கான பணிகளை மேற்கொள்ள 10 நாட்கள் காலக்கெடுவையும் விதித்தார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று 6 நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெடியை வீசினார். இவரது கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷர் எகிறியது. இந்த நிலையில் இன்று காலை செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளில் இருந்தும் நீக்கினார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவிகளையும் பறித்து, வேறு நிர்வாகிகளை நியமனம் செய்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபிசெட்டிப்பாளையத்தில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என்று சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பதவியில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதங்களை எடப்பாடி பழனிசாமிக்கு தனித்தனியாக அனுப்பி வருகின்றனர்.
அந்த கடிதத்தில், அதிமுக பழைய வலிமையை பெற வேண்டும், வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும்.. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்காளை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்.
ஆனால் நீங்கள் அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிப் பதவிகளில் இருந்து விலகுகிறோம். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே பதவியில் நீஒடிப்போம் என்று கையெழுத்திட்டு அனுப்பி இருக்கின்றனர். செங்கோட்டையன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications