"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்து சாதனை படைத்துள்ளார் கோவை பெண்
கோவை: 7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார்.. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தொழில்நுட்பத்தாலும், விஞ்ஞானத்தாலும் எட்ட முடியாத கலப்படமற்ற பொருள் இந்த உலகில் உண்டு என்றால் தாய்ப்பால் மட்டுமே.. தாய்மைக்கே பெருமை சேர்ப்பது தாய்ப்பால் தான்.
தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகளை அளவிட முடியாது.. பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தாய்ப்பால் இன்றியமையாததாக இருக்கிறது.

உறுப்புகள்
தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும்.. அதேபோல, தானங்களில் உயர்ந்த தானம் அன்னதானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் என்று பலவகைகள் இருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் ஒன்று மட்டுமே தீர்வாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. பிரசவத்துக்கு பிறகு, உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்பட்டுவிடும்.. அதேபோல, பிரசவத்தின்போது, தாய் உயிரிழப்பதால், பச்சிளம் குழந்தைகள் வாடும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது..

சூப்பர் தானம்
ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் போன்றோர்க்கும் தாய்ப்பால் கிடைப்பதில் நிறைய சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட இடர்பாடுகளை தவிர்ப்பதற்காகத்தான், அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது... ஆனால், இந்த திட்டத்தை பற்றி நிறைய தாய்மார்கள் தெரிந்து வைத்திருந்தாலும், சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பெண் வெறும் 7 மாதங்களில், சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். கோவையை சேர்ந்த அவரது பெயர் ஸ்ரீ வித்யா.. தன்னுடைய சாதனைக்காக ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் ஸ்ரீவித்யா இடம்பிடித்துள்ளார்.

தாய்ப்பால் தானம்
வடவள்ளி பகுதியில் உள்ள பிஎன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகிறது.. திருமணமாகி சில வருடமாகிறது.. 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மறுபடியும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்ரீவித்யா.. இதையடுத்து அவருக்கு சுரக்கும் தாய்ப்பாலை தன்னுடைய குழந்தைக்குப்போக, மீதம் இருப்பதை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்து வருகிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 7 மாதங்களாக சுமார் 105 லிட்டர் தாய்ப்பாலை தானமாக ஸ்ரீவித்யா வழங்கியுள்ளார்.

ஸ்ரீவித்யா
தொடர்ந்து தாய்ப்பாலை தானமாக வழங்கி வரும் இவர், இப்போது வரை 127 லிட்டர் வரை தானமாக வழங்கியுள்ளாராம்.. இதையடுத்து, "ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" மற்றும் "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்"-ல் இடம்பெற்றுள்ளார் ஸ்ரீவித்யா.. ஸ்ரீவித்யாவின் தாய்ப்பால் தானத்தால் இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இளம்தாய் ஸ்ரீவித்யாவை இதற்காக பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்... இதையடுத்து, தாய்ப்பால் தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மேலும் அதிகமான பிரசவித்த பெண்கள் தங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்க முனைப்பு காட்டுவர் என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்...

தாய்ப்பால்
இதுகுறித்து ஸ்ரீவித்யா சொல்லும்போது, "எனக்கு மூத்த மகன் பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் திட்டம் குறித்து அறிந்திருந்தேன். ஆனாலும் அப்போது என்னால் தானம் செய்ய முடியவில்லை... அரசு மருத்துவமனைகளில் தினமும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் குறைந்த எடையிலும், உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பிறந்திருப்பார்கள்... இதுபோன்ற குழந்தைகளுக்கு அவர்களது தாயாரால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. அதனால், தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க தானம் அளிக்க முடிவு செய்தேன்.

கப் + டியூப்
திருப்பூரை சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக, தாய்ப்பால் தானத்தை சமூக சேவை அடிப்படையில் நான் அளித்து வருகிறேன். என்னுடைய மகள் பிறந்த 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன்.. தினமும் குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கென பிரத்யேகமாக உள்ள பாக்கெட்டில் சேகரித்து, குளிர்சாதன இயந்திரத்தில் வைத்து விடுவோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் மூலமாக சேகரித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அளிக்கப்படும்... அங்கு தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பிறகு, 'கப்' மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது என்று மகிழ்ந்து சொல்கிறார் ஸ்ரீவித்யா.












Click it and Unblock the Notifications