"வெளிச்சம்".. கோவையே அசந்து போச்சே.. போலீஸ்காரர் வீட்டுல என்னாச்சுனு பாருங்க.. இதான் நம்ம "தமிழ்நாடு"
கோவை: போலீஸ்காரர் வீட்டு திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. பார்ப்போர் அனைவரையும் அசரடித்தும் வருகிறது.. என்ன காரணம்?
கோவையில் மும்மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போலீஸ் டி.எஸ்.பி. வீட்டு திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறப்பான பணி: கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.. இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு எஸ்ஐசி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார். பணியின்போது, நிறைய மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டுள்ளார்.. அத்துடன், சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
எத்தனையோ பிரச்சினைகளின்போது துரிதமாக செயல்பட்டதுடன், கலவரங்கள் எதுவும் வராமல் நாசூக்காக தடுத்து நிறுத்தி உள்ளார்.. அப்படி ஒரு கலவரமே நடக்காத வகையில், அவைகளை கட்டுப்படுத்தியும் உள்ளார்... காவல்துறையை பொறுத்தவரை, மத கலவரங்கள் ஏற்படாதவாறு தவிர்ப்பதும், முன்கூட்டியே தகர்ப்பதும் மிக முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.. இவரது இந்த செயல்பாட்டுக்காகவே, ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதினை வெற்றிச்செல்வம் பெற்றுள்ளார்.
திருமணம்: எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படை கொள்கையை ஏற்று நடப்பவர் வெற்றிச்செல்வம்.. இவரது மகள் பெயர் நிஷாந்தினி.. பிஎச்டி படித்து வருகிறார்.. இவருக்கு திருமணம் செய்து வைக்க வெற்றிச்செல்வன் முடிவு செய்தார்... இறுதியில், நெல்லையை சேர்ந்த சுதர்சன் என்பவரையும் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடித்தார்... மதநல்லிணக்கத்துக்கு அடிப்படையாக இந்த திருமணம் இருக்க வேண்டும் என்றும் வெற்றிச்செல்வம் நினைத்தார்..
இதற்காகவே, இந்து + கிறிஸ்தவம் + இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் இந்த திருமணத்தை நடத்த முடிவெடுத்தார். அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மவுளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு தன்னுடைய மகள் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், இது தொடர்பாக அடிக்கப்பட்ட கல்யாண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த பத்திரிக்கையில், "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு." என்ற திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
பெருமிதம்: போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக உள்ளது.. அத்துடன், பலரது கவனத்தையும் இது திருப்பி வருகிறது.. இந்த பத்திரிகையை பார்க்கும் அனைவருமே, வெற்றிச்செல்வனின் மத நல்லினக்கத்தை கண்டு பெருமிதம் கொண்டுள்ளனர்.. அத்துடன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நாளைக்குதான் கல்யாணம் நடக்க போகிறது... நாளை மறுநாள் 25-ந் தேதி (வியாழக்கிழமை)யும் திருமண வைபவம் நடக்கிறது.. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மண்டபத்தில் 2 நாட்கள் இந்த திருமணம் நடைபெற உள்ளது.. தமிழக போலீஸ் டிஜிபிக்கள் ஏகே விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மனிதம் தழைக்கட்டும்: மதங்களை கடந்து மனிதர்களை நேசிக்கும் வெற்றிச்செல்வன் போன்றோர் இருக்கும்வகையில், எந்த மதவாத பிளவையும் யாராலும் கட்டவிழ்த்துவிடவே முடியாது.. அத்துடன், சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த போலீஸ்காரர் வீட்டு திருமணம் மீண்டும் உணர்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications