பாக்யராஜ் பச்சை பொய்.. கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையினிலே.. போலீசுக்கு ஓடியது யார்னு பாருங்க
கோவை: பிரபல டைரக்டர் பாக்யராஜ் மீது அதிருப்திகளும், கண்டனங்களும் வலுத்து வரும்நிலையில், போலீசுக்கே புகார் சென்றுவிட்டது. பாக்யராஜ் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழ துவங்கி உள்ளன.
பிரபல டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவை பேசி வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், "வெளியூரிலிருந்து வந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் (வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில்) குளிப்பவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்கள்" என்ற குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

பவானி ஆற்றில்: அதாவது, "மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை கிடையாது.. ஆற்றில் குளிப்பவர்களை நீருக்குள் இருக்கும் சில மர்ம நபர்கள் காலைப் பிடித்து இழுத்து மூழ்கடித்து, பாறை இடுக்கில் அவர்களது உடலை சொருகிவிடுகிறார்கள்... பிறகு, பணத்தை பெற்றுக் கொண்டு, சில மணி நேரங்கள் தேடி உடலை மீட்டு தருகிறார்கள்.. பணம் பறிக்கும் நோக்கிலேயே இப்படியெல்லாம் செய்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
பாக்யராஜின் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.. உடனடியாக இந்த செய்தியை மறுத்து கோவை எஸ்பி பத்ரி நாராயணன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
புகார்கள்: இந்நிலையில், தவறான தகவலை பரப்பிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் மஸ்தான் என்பவர் இந்த புகாரை தந்திருக்கிறார்.
அந்த புகாரில், "மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவானி ஆற்றில் குளிக்கும் போது திட்டமிட்டு கொலை செய்யப்படுவதாக கே.பாக்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பல்வேறு சோசியல் மீடியாக்களும் பகிர்ந்திருந்தன. இதனால், இந்த பொய்யான செய்தி தமிழகம் முழுவதும் சென்று விட்டது.
நடவடிக்கை: ஆனால், திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் குறிப்பிட்டது போல இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்ததில்லை. எனவே, இப்பகுதி மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் வதந்தியை பரப்பிய திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications