கோவை டூ சிங்கப்பூர் இனி ஜாலியா பறக்கலாம்.. மகிழ்ச்சி தகவல்
கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளதால் தொழில்துறையினர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பாக தென்னகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கை சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா காரணமாக சர்வதேச நாடுகளுக்கும் உள்ளூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதேபோல் கோவையில் இருந்து மூன்று நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

விமான சேவை நிறுத்தம்
இந்த நிலையில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததை அடுத்து கோவையில் இருந்து துபாய் நாட்டின் ஷார்ஜாவுக்கு மட்டும் கடந்த சில மாதங்களாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில் துறையினர் கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மீண்டும் விமான சேவை துவக்கம்
இதனையடுத்து நீண்ட பரிசீலனைக்கு பிறகு கோவை சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் துவக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளதால் சுற்றுலா பயணிகள் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல நாடுகளுக்கு விமான சேவை வழங்கி வரும் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை பயணிகளுக்கு வழங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமான சேவை நேரம்
இரவு 10.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரை இறங்கும் ஃப்ளை ஸ்கூட் விமானம் மீண்டும் இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து நேரடியாக கோவை செல்லும் பயணிகளுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் எனவும், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து கோவை வர முயற்சி செய்பவர்களுக்கு இந்த விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட கோவை சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் தொழில்துறையினர் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் பல நாடுகளுக்கு கோவையிலிருந்து நேரடியாக விமான சேவையை வழங்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications