வேண்டாம்னு படித்து படித்து சொன்ன கோவை மக்கள்.. கேட்காமல் போன ஜெர்மனி சுற்றுலா பயணி! யானை தாக்கி பலி
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள டைகர் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் காட்டு யானை ஒன்று அங்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர் உடனடியாக அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.

யானைகள்:
பொதுவாக யானைகள் மனிதர்களைச் சீண்டாது. தனது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்றுவிடும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே யானையின் வாழ்விடங்கள் குறைந்து வருவதாலும் காட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதாலும் யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற மனித மிருக மோதல்கள் கணிசமாகவே அதிகரித்துள்ளது.
இதுபோன்ற தாக்குதல்களைக் குறைக்க வனத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில முறை யானைகள் மனிதர்களைத் தாக்கிவிடுகின்றன. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கோவை வால்பாறை அடுத்துள்ள டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் வெளிநாட்டுப் பயணியைக் காட்டு யானை தாக்கியுள்ளது.
டைகர் பள்ளத்தாக்கு:
டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் வந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். பொள்ளாச்சியில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த நபரைக் காட்டு யானை தாக்கியுள்ளது. அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் யானையை விரட்டிவிட்டு அவரை மீட்டுள்ளனர்.
அவர் படுகாயமடைந்த நிலையில், பொதுமக்கள் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டார்.. பொள்ளாச்சி மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் அவர்:
உயிரிழந்த அந்த நபர் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் (60) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யானை சாலையில் இருப்பதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அங்குச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இருப்பினும், அதைத் தாண்டி மைக்கேல் போய் இருக்கிறார். அருகே வந்ததால் ஆத்திரமடைந்த யானை, மைக்கேலை தூக்கி வீசியுள்ளது. சற்று தூரம் யானை நகர்ந்த நிலையில், மைக்கேல் மீண்டும் எழுந்து யானையை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது யானை மீண்டும் தாக்கியதிலேயே அவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை யானை:
யானைகளைப் பொறுத்தவரை எப்போதுமே கூட்டமாக இருக்கும் யானைகளை விட ஒற்றை யானைகளே ஆபத்தானவை ஆகும். அவை அதீத ஆக்ரோஷத்துடன் இருக்கும். எனவே, ஒற்றை யானை அருகில் எப்போதும் செல்லவே கூடாது என்றே வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒருவேளை நாம் செல்லும் பாதையில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்தாலும் அது அங்கிருந்து சென்ற பிறகே, செல்ல பொதுமக்கள் வேண்டும் என்பதையும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications