கோவை வெள்ளலூர் பெரியார் சிலை சேதம்- 2 இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!
கோவை: கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இந்து முன்னணி நிர்வாகிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
தமிழகத்தில் அண்மை காலமாக தந்தை பெரியார் சிலை, அன்னை மணியம்மையார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொதுவாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டால் உடனடியாக அதனை சீரமைத்துவிட்டு மனநோயாளிகளே இப்படி அவமதித்தனர் என சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது போலீஸ்.

கி.வீரமணி அதிருப்தி
இது தொடர்பாக கடும் அதிருப்தி வெளியிட்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அது என்ன பெரியார் சிலை மட்டுமே மனநோயாளிகளின் கண்களுக்கு தெரிகிறது? எது என்ன காவி சாயம் மட்டுமே பெரியார் சிலைக்கு பூசப்படுகிறது? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார் வீரமணி.

வெள்ளலூர் பெரியார் சிலை
இந்நிலையில் கோவை வெள்ளலூரில் திராவிடர் கழகத்தினரின் படிப்பகம் அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலைக்கு சமூகவிரோதிகள் செருப்பு மாலையும் அணிவித்திருந்தனர். இதனைக் கொண்டு திராவிட இயக்கங்கள், திராவிட கட்சிகள் கோவை, வெள்ளலூர் ஆகிய இடங்களில் போராட்டங்களை நடத்தினர். மேலும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இத்தகைய தொடர் அவமதிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இந்து முன்னணி நிர்வாகிகள்
இதையடுத்து அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர். அதில் தந்தை பெரியார் சிலைக்கு 2 பேர் செருப்பு மாலை அணிவிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இந்த 2 பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. வெள்ளலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண் கார்த்திக் (26), அவரது நண்பர் மோகன்ராஜ் (28) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பாய்ந்தது குண்டாஸ்
இப்போது இந்த இருவர் மீதும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் தலைவர்கள் சிலைகளை உடைக்கும் சமூகவிரோதிகள் இனி அச்சப்படுவர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications