பொள்ளாச்சி வழியாக பழனி செல்லும் ஆளுநர்! ''கெட் அவுட் போஸ்ட் மேன்'' என போஸ்டர்கள் ஒட்டிய திமுக!
கோவை: ஆளுநர் ரவியை ''கெட் அவுட் போஸ்ட் மேன்'' என விமர்சித்து பொள்ளாச்சியில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக ஆளுநர் ரவி இன்று பழனிக்கு செல்லவுள்ள நிலையில் இந்த போஸ்டர்கள் அவர் பயணிக்கும் பாதைகளில் ஒட்டப்பட்டுள்ளன. இதனிடையே அந்த போஸ்டர்கள் ஆளுநர் ரவியை கடுமையாக கோபம் கொள்ளச் செய்யும் என்பதால் அதனை சினிமா போஸ்டர்களை கொண்டு மறைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

போஸ்டர்களுக்கும், பிளக்ஸ் பேனர்களுக்கும் பெயர் பெற்ற ஊர் மதுரை. ஏனெனில் அரசியல்வாதிகளாலும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களாலும் அங்கு ஒட்டப்படும் சுவரொட்டிகளிலும், பேனர்களிலும் இடம்பெறும் வாசகங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் அமையும். அண்மைக்காலமாக அது போன்ற போஸ்டர்களை அடித்து ஒட்டி கவனம் ஈர்த்து வருகிறார் பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன்.
மணிப்பூர் விவகாரத்தின் போது ரோம் மன்னன் பிடில் வாசித்த படத்தையும், பிரதமர் மோடி படத்தையும் ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டியிருந்தார். இன்று என்னவென்றால் ஆளுநரை போஸ்ட் மேன் என்றும் ''கெட் அவுட் போஸ்ட் மேன்'' எனவும் போஸ்டர்கள் அடித்து பொள்ளாச்சி முழுவதும் ஒட்டியிருக்கிறார்.

இதனிடையே ஆளுங்கட்சி தரப்பில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அதனை அப்புறப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது காவல்துறை. ஆளுநர் கண்களில் இந்த போஸ்டர்கள் தென்படா வண்ணம் அதனை சினிமா போஸ்டர்களை கொண்டு மூடும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் பொள்ளாச்சியை கடந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications