மதுபோதையில் தொல்லை கொடுத்த பேரன்.. ஆளைவைத்துக் கொன்று நாடகமாடிய தாத்தா
கோவை: தினமும் மது அருந்திவிட்டு, போதையில் தகராறு செய்த பேரன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு மயங்கி உயிரிழந்ததாக நாடகமாடிய தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்,
கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மகன் விஜயராகவன்(26). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள விஜயராகவன், வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார், மேலும், மது போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு இரவு உணவு சாப்பிட்டு விட்டு, தனது அறைக்குச் சென்ற விஜயராகவன், காலையில் அசைவற்று கிடந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விஜயராகவன் கீழே விழுந்து மயங்கியதில் உயிரிழந்துவிட்டதாக அவரது தாத்தா முருகன் அக்கம் பக்கத்தினரிடம் சொல்லியுள்ளார்.
இருப்பினும் சந்தேகம் அடைந்த சிலர் இது தொடர்பாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஜயராகவன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் சந்தேகத்தின் பேரில், உயிரிழந்த விஜயராகவனின் தாத்தா முருகனைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் திருப்பதி, நாகராஜ் ஆகிய இருவரின் உதவியுடன், விஜயராகவனை கொன்றதாக அவரது தாத்தா முருகன் ஒப்புக்கொண்டார்.
தினமும் மது அருந்திவிட்டு, போதையில் தகராறு செய்ததாலும், திருமணம் செய்து வைத்தாலும் பெண்ணின் வாழ்க்கை சீரழிந்து விடும் எனக் கருதியதாலும் ஆள் வைத்துக் கொன்றதாகத் தாத்தா முருகன் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து முருகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications