ஒட்டுமொத்த அரசாங்கமும் ஈரோட்டில்..கோவையில் துப்பாக்கி கலாசாரம் அதிகரிப்பு.. வானதி சீனிவாசன் அட்டாக்
சினிமா பாணியில் கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது என்றும் ரவுடிகளுக்கு பயம் இல்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை: இடைத்தேர்தலில் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் உட்கார்ந்துட்டு இருக்காங்க என்றும் சினிமா பாணியில் கோவையில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது எனவும் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக தரப்பில் ஆனந்த் என்பவரும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்
பலமுனை போட்டி நிலவினாலும் திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிபபாக ஆளும் திமுகவில் மூத்த அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு இருப்பதாக அதிகார பலம் , பண பலத்தை பயன்படுத்துவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:- கோவை மாநகராட்சியில் சாலை பற்றி நான் எப்போது கேட்டாலும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சொல்கிறார். ஆனால் இன்றைக்கு வரை இந்த சாலைகளின் நிலைமை மாறவில்லை. எனவே கோவை மாநகராட்சியை புறக்கணிக்காமல் நல்ல சாலைகளை போட்டு தர வேண்டும்.

ஒட்டுமொத்த அரசாங்கமும்
மாநகராட்சி நகரத்தை தூய்மை படுத்துவதற்கான ஒரு கட்ட முயற்சியாக மேம்பால தூண்களில் அழகான சித்திரத்தை வரைவதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சென்னையில் கூட அழகான சித்திரங்கள் உள்ளன. உண்மையிலேயே நான் மனம் திறந்து பராட்டுகிறேன். அதே மாதிரி ஒரு முயற்சியில் கோவை மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தலில் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் உட்கார்ந்துட்டு இருக்காங்க..

கொலையில் முடிந்து இருக்கிறது
கோவையில் பட்டப்பகலில் எஸ்.பி அலுவலகம் முன்பாக.. கலெக்டர் அலுவலகம் முன்பாக படு கொலைகள் நடக்கிறது. தொடர்ச்சியாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக கவுன்சிலர் கிருஷ்ணகிரியில் ஒரு ராணுவ வீரரை பிரச்சினையில் அடித்து இருக்கிறார். இது ஒரு கொலை மாதிரிதான். தகராறில் வந்து இருக்கிறது. கொலையில் முடிந்து இருக்கிறது.

நிர்வாகிகள் சேலஞ்ச் விடுப்பது போல
திமுகவினரும் அவர்களுடைய ஆதரவை பெற்றவர்களும் அரசாங்கம் அவர்களிடம் இருக்கிறது என்ற காரணத்திற்காக வன்முறை மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமைச்சரே பொது இடத்தில் கல்லெடுத்து அடிப்பது.. நிர்வாகிகள் சேலஞ்ச் விடுப்பது போன்ற விஷயங்கள் அதிகரிப்பது எதைக் காட்டுகிறது என்றால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்ன பண்ணினாலும் நடவடிக்கை எடுக்காது என்று நினைப்பதையே காட்டுகிறது.

சினிமா பாணியில் துப்பாக்கி கலாசாரம்
இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறும் போது முதல்வர் தனது கட்சிக்கு சரியான கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் ஒழுங்கை பரமாரிப்பதற்காக நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வெண்டும். அரசு இயந்திரம் முழுமையாக முடங்கிப்ப்போய்விடும் அளவுக்கு ஒரு தொகுதியின் தேர்தல் பணி முடக்கிப்போய்விடக்கூடாது. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கொடுக்கிறது. எங்கள் கட்சி (பாஜக) புகார் கொடுக்கிறது. பணப்பட்டுவாடா பற்றியும் மக்கள் அடைத்து வைக்கப்படுவது பற்றியும் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையமும் இதைப்பற்றி தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா பாணியில் கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications