மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு.. திராவிட அரசின் மிரட்டலுக்கு இந்து மதம் அஞ்சாது.. எஸ்.ஆர்.சேகர் பரபரப்பு
கோவை: சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில், திராவிட அரசின் மிரட்டலுக்கு இந்து மதம் அஞ்சாது என்றும், இந்த விவகாரத்தை பாஜக எதிர்கொள்ளும் என்றும் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரித்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தைப் போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்தார்.
இதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் கடந்த வாரம் வரவழைக்கப்பட்டார்.

இந்நிலையில், சொற்பொழிவின்போது அவர் திடீரென சம்பந்தமே இல்லாமல் மறுபிறவி குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும், ஏழைகளாகவும் பிறக்கிறார்கள்.
அதேபோல, கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என பேசியுள்ளார். அப்போது, அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் சங்கர் அவரது பேச்சை கடுமையாக எதிர்த்துள்ளார். அப்போது அவரை மகாவிஷ்ணு அறிவற்றவர் என விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, கோவையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்பில் மகேஷைவிட வயதில் சிறியவர் மகாவிஷ்ணு. அவருக்கு உள்ள மெச்யூரிட்டி கூட அமைச்சருக்கு இல்லை. ஒரு ரவுடி பேசிவதுபோல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி, தம்பி மகாவிஷ்ணு மீது மிரட்டல் விடுத்திருக்கிறார். இது கண்டிக்கதக்கது. பாவம் புண்ணியம் எல்லாம் மதத்திலும் உள்ளது. எனவே, இது ஒரு மதம் சார்ந்தது என்று சொல்ல முடியாது.
கடவுள் இல்லை என்கிற சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவகாரத்தை அணுகுகிறார்கள். கடவுள் மறுப்பு உள்ளதால் இப்படி மிரட்டல் விடுத்துள்ளார்களா?. இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதேபோல, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. இதற்கெல்லாம் மேலாக மதத்தை வைத்து அமைச்சர் மிரட்டி இருந்தால் அது மத சுதந்திரத்திற்கு எதிரானது. இது மதத்திற்கு எதிரான ஒரு மிரட்டல் என்று உறுதியாக சொல்ல முடியும். இந்த விவாகரத்தை பாஜக எதிர்கொள்ளும்.
அன்பில் மகேஷ் பாவம் புண்ணியத்தை நம்பாதவரா?. அவரது தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை முன்பு படையல் போட்டு வணங்குகிறார்களே. இதை எப்படி பார்ப்பது. வீட்டில் ஒரு வேஷம், வெளியில் ஒரு வேஷம் போடுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு இந்த நாடு, இந்து மதம் அஞ்சாது. திராவிட அரசு இந்த விவகாரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்துபவர்களை மிரட்டிப் பார்க்கிறது.
இதற்கு ஆன்மீக சொற்பொழிவாளர்கள் அஞ்ச மாட்டார்கள். இந்து மதமும் அஞ்சாது. இந்து மதத்தின் மீதும், பச்சைத் தமிழன் திருவள்ளுவர் மீது நீங்கள் தொடுத்திருக்கிற போரை பாஜக எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications