ரகுமானுக்கு பொருத்தப்பட்ட மஞ்சுளாவின் இதயம்.. அப்படியே நெகிழ்ந்து போன கோவை.. மருத்துவர்கள் சாதனை!
கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய விடியல் செயலி மூலம், இஸ்லாமியர் ஒருவருக்கு இந்து பெண்ணின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதை வெற்றிகரமாக சாதித்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கேரளாவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரகுமான். பெண் பிள்ளைகளை எப்படியாவது கரை சேர்த்துவிட வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர். இரவு பகல் தெரியாமல் உழைத்ததால் உடல் ஆட்டம் காண தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறலால் பெரும் அவதியுற்று வந்த அவர் இதை சாதாரண பிரச்னை என்று நினைத்துவிட்டார். பின்னர் அது நெஞ்சு வலியாக மாறியது. மருத்துவமனையில் பரிசோதித்தபோதுதான் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.

இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனில் அறுவை சிகிச்சை அவசியம். ஆனால் அதற்கு போதுமான பணம் அவரிடம் கிடையாது. அதேபோல இந்த பிரச்னைக்கு இதை சாப்பிட்டால் சரியாகிவிடும், அதை சாப்பிட்டால் சரியாகிவிடும் என முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார். பலன் இதய பாதிப்பு தீவிர இதய பாதிப்பாக பரிணாமமடைந்தது. சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சு வலியை தாங்க முடியாமல் கோவையின் பந்தைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் இவர் இதய நோய் மிக தீவிரமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மட்டுமல்லாது இந்த பாதிப்பிலிருந்து மீள முடியாது என்பதையும் மருத்துவர்கள் விளக்கினர். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
இப்படி இருக்கையில்தான் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுமார் 51 வயது மதிக்கத்தக்க மஞ்சுளா எனும் பெண் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இனி இவரால் பிழைக்க முடியாது என்று கூறிவிட்டனர். எனவே இவரது உறுப்புகளை 'விடியல்' செயலி மூலமாக தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். இதையறிந்த ராகுமானுக்கு சிசிக்சை அளித்த மருத்துவக்குழு, ஈரோடு அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு உறுப்பு தானம் குறித்த கோரிக்கையை வைத்தது.
இரு மருத்துவ குழுவும் கலந்து பேசி, உறவினர்களின் ஒப்புதலுடன் ரகுமானுக்கு இதயத்தை பொறுத்தும் முயற்சியில் இறங்கின. முதல்கட்டமாக ஈரோட்டிலிருந்து மஞ்சுாளவின் இதயம் கோவைக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக காவல்துறையினரின் உதவியுடன் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ஈரோட்டிலிருந்து கோவை போக சுமார் 2 மணி நேரம் ஆகும். ஆனால் இதயத்தை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் வெறும் 50 நிமிடங்களில் கோவை மருத்துவமனையை சென்றடைந்தது.
இதன் பின்னர் 6 மணி நேர அறுவை சிகிச்சை செய்து ரகுமானுக்கு இதயத்தை மருத்துவர்கள் பொருத்தினர். இந்த மொத்த அறுவை சிகிச்சையையும் 60 மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கின்றனர். ஒரு இஸ்லாமியருக்கு இந்து பெண்ணின் இதயம் பொருத்தப்பட்டிருக்கும் சம்பவம் மஞ்சுளா, ரகுமான் குடும்பத்தினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கோவை மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications