திமுக பொதுக்கூட்டம் திக் திக்! அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிபியை எகிற வைத்த பொள்ளாச்சி!
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் திமுக பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் சுணக்கம் அடைந்துள்ளது.
நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்த பந்தல் அமைப்பாளர், இப்படியே மழை பெய்து கொண்டிருந்தால் மேடை அமைப்பது கடினம் எனக் கூறிவிட்டு வந்திருக்கிறார்.
இதனால் பொள்ளாச்சி வானிலையும், மழையும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பிபியை நேற்று எகிற வைத்ததாம்.

திமுக பொதுக்கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் இம்மாதம் 15-ஆம் தேதி கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக 14-ஆம் தேதி மாலையே அவர் கோவை செல்கிறார். அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், 15-ஆம் தேதி காலை 25,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும், அன்றைய தினம் மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

முன்னேற்பாடுகள்
இதற்கான இடத்தை தேர்வு செய்து அங்கு பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைப்பது உள்ளிட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி முடுக்கிவிட்டு வருகிறார். இதனிடையே கடந்த 2 நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழை காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் மைதானம் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. இதனால் மேடை அமைக்க முடியாமல் திணறிய ஏற்பாட்டாளர் உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விவரத்தை எடுத்துக் கூறியிருக்கிறார்.

பொதுக்கூட்டம் சந்தேகம்
இதனால் ஒரு கட்டத்தில் திட்டமிட்டப் படி பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் திமுகவினருக்கு ஏற்பட்டது. முதலமைச்சரிடம் தேதி வாங்கிவிட்டு அதை ரத்து செய்தால் தனது இமேஜ் பாதிக்கும் என்பதால் எப்படியாவது மாற்று ஏற்பாடு செய்தாவது பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க முடிவெடுத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. பொள்ளாச்சி வானிலையும், மழையும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பிபியை நேற்று எகிற வைத்திருக்கிறது.

மழை ஓய்ந்தது
இந்நிலையில் இன்று ஒரு வழியாக மழை ஓய்ந்ததை அடுத்து நேராக ஸ்பாட்டுக்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்து வேலை ஜரூராக ஆக வேண்டும் என அறிவுறுத்திவிட்டு சென்றிருக்கிறார். இதையடுத்து அங்கு திமுக பொதுக்கூட்டத்துக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications