இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை.. பாரத் என்றால் ஒளி.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோவை : இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.
"புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பில் கோவையில் இரண்டு நாட்கள் கருத்தரங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய கல்வி கொள்கையின் சிறப்புகள் மற்றும் நாட்டின் பாரம்பரியத்துடன் சேர்ந்த கல்வி முறை குறித்து கருத்திட்டனர்.

இதன்பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், உலகளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது. இதில் நமது அறிவை வளர்ப்பதும் முக்கியமானதாகிறது. அதற்கு நமது தேசிய கல்வி கொள்கை வழி வகுக்கிறது. அதேபோல் பாரத் என்பதை இந்தியா என்னும் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். இந்தியா மற்றும் பாரத் ஒரே அர்த்தம் அல்ல. பாரத் என்றால் ஒளி.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு வரை பல நூற்றாண்டுகளாக பாரத் என்றே இந்தியா அழைக்கப்பட்டு வந்தது. இந்தியா என்பது அந்நியர்கள் கொடுத்த பெயர் அடையாளம். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதம் உலகின் தலைசிறந்த நாடாக இருந்தது. இந்தியா விடுதலை அடைந்த பின்னரும் உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் தான் இருந்தோம். இதற்கு மேற்கத்திய நாடுகளின் சிந்தனைகளின் தாக்கம்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறிய போதும் காலனி நாடுகளின் தாக்கம் அனைத்து துறைகளிலும் இருந்து வந்தது. குறிப்பாக கல்வியில் இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமது நாட்டின் பாரம்பரிய கல்வி முறை உள்ளது. நமது பாரத நாட்டில் உள்ள அனைத்தும் ஒரே குடும்பம் என்று பார்க்கும் அறிவும் சிந்தனையும் உள்ளது.
யாதும் ஊரே.. யாவரும் கேளிர், வாசுதேவ குடும்பகம் ஆகிய தத்துவங்கள் நமது ரிஷிகள் நமக்கு வழங்கிய முக்கியமான அறிவாகும். நமது மாநில பாடத்திட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயே காலனிய ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்தலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த ஆயிரக்கணக்கான விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் உலக நாடுகள் பாதிக்கப்பட்ட போது, இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரித்து உலக நாடுகளுக்கு வழங்கினர். இதுவே நமது அறிவின் சிறப்பாகும். இந்த சூழலில் கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு தடையாக மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் உள்ளன. அதனை எதிர்கொண்டு பாரம்பரியமிக்க நமது அல்வி அறிவை சீர் செய்ய கல்வியாளர்கள் ஆலோசனை முன் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications