இலவச மின்சாரம் ஆதார் இணைப்பு கட்டாயமா? பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்! செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இலவச மின்சாரம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினருக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு வழிகளிலும் மானிய விலையில் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

ஆதார்
இதற்கிடையே மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணிகளைத் தமிழ்நாடு மின்சார துறை தொடங்கி உள்ளது. இதற்காக மின் இணைப்புதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதற்கிடையே ஆதார் எண் இணைப்பு தொடர்பாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது போன்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி
இதற்கிடையே இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களிடம் அவர், "மின்வாரிய இணைப்பு எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு என்பது நிர்வாக ரீதியாக நடக்கும் செய்தியாகும். இது வழக்கமாக நடைபெறும் பணி. இதற்கும் இலவச மின்சார விநியோகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இலவச மின் விநியோகம் எப்போதும் போலத் தொடரும்.

இலவச மின்சாரம்
தமிழ்நாட்டில் விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் ஆகியோருக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அது எப்போதும் போலத் தங்கு தடையில்லாமல் தொடரும். அதேபோல ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இலவச மின்சாரம் கிடைக்கும் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இலவச மின்சாரம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட மாட்டாது.

எதற்காக
மின்சாரம் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விநியோகம், கட்டண அளவு உள்ளிட்டவை குறித்த தரவுகளை பெற பணிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே மின் நுகர்வோர் தரவுகளைப் பெறவே ஆதார் எண்ணை இணைத்து வருகிறோம். முன்பு 1.15 மின் நுகர்வோர் தரவுகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது 3 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் தரவுகளை திரட்டி உள்ளோம்.

இலவச மின்சாரம்
கடந்த 1.5 ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா? அதிமுக ஆட்சியில் இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்களைக் கிடப்பில் போட்டு இருந்தார்கள். அந்த விண்ணப்பங்களை எல்லாம் பரிசீலனை செய்து இலவச மின்சாரத்தை வழங்கி உள்ளோம்.

கோவை ஏர்போர்ட்
அதேபோல கோவை ஏர்போர்ட் விரிவாக்க பணிகளுக்குத் தேவையான நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்கனவே 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்த பின்னரே இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கோவைக்குத் தேவையான திட்டங்களை முதல்வரே அறிந்து அதைச் சரியான நேரத்தில் வழங்கி வருகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications