இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தும் இறங்கல.. கோவை ஆம்னி பேருந்தில் ஷாக்! பெண் ஐடி ஊழியர் உயிரிழப்பு!
கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு நேற்று காலை கோவை வந்துள்ளது. பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை பேருந்து நின்ற பிறகு அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகும் இறங்கவில்லை.

இதையடுத்து, ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் காந்திபுரத்தில் அந்தப் பெண்ணிடம், காந்திபுரம் வந்துவிட்டது எனக் கூறி அவரை எழுப்ப முயன்றுள்ளனர். அப்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே 108 ஆம்புலன்சிற்கு தகவலளித்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காட்டூர் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்தப் பெண் பெயர் மகாலட்சுமி என்பது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார். வரும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
ஆம்னி பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் மகாலட்சுமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகின்றனர். ஐ.டி துறையில் பணியாற்றும் இளம்பெண் ஆம்னி பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications