ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவு தினம்... வானிலையால் கோவையில் ரத்தான நிகழ்ச்சிகள்..!
கோவை: ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில், கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
கோவை வடக்கு புறநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக இருப்பவர் சோனாலி பிரதீப். இவரது தந்தை எம்.ஜி.ஆர். காலத்து கட்சி நிர்வாகியாக இருந்து மறைந்தவர். இந்நிலையில் பேராசிரியராக இருந்த சோனாலி பிரதீப் தனது தந்தை மறைவுக்கு பிறகு அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

கோவையில் மேயர் வேட்பாளராக கூட இவர் அதிமுக சார்பில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இதனிடையே இவரது கணவர் பிரதீப் சினிமா தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அண்மையில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பிரிவில் பொறுப்பு கிடைத்ததால், ஜெயலலிதா நினைவுத்தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாஸ் காட்டத் திட்டமிட்டிருந்தார்.

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்கும் பேரணி, அன்னதானம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த சூழலில் வானிலை காரணமாக அனைத்தும் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. முதல்முறையாக பொறுப்புக்கு வந்துள்ள சூழலில் தாம் நடத்தவிருந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் போனது சோனாலி பிரதீப் தரப்பிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனிடையே வரும் வாரத்தில் கோவை கவுண்டம்பாளையம் அல்லது தொண்டாமுத்தூர் பகுதியில் பெரியளவில் அன்னதான நிகழ்ச்சியை நடத்தியே தீருவது என்ற முடிவில் இருக்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications