தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டிருந்தால்.. இந்தியா கூட்டணிதான் ஆட்சியை பிடித்திருக்கும்: சிபிஎம்
கோயம்புத்தூர்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணிதான் ஆட்சிக்கு வந்திருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைத்தது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பார்த்தால் திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. வடமாவட்டங்களான திருவள்ளூர், அரக்கோணம் மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், கரூர், திருச்சி கொங்கு மண்டலமான கோவை, நாமக்கல், நீலகிரி, தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, தூத்துக்குடி ஆகியவற்றில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக வழக்கத்தை விட அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
அதிமுக வலுவாக இருப்பதாக கருதப்படும் மேற்கு மண்டலத்திலும் திமுக அதிக வாக்குகளை வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று முப்பெரும் விழா கோவையில் நடபெற்று வருகிறது. இந்த விழாவில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சிறப்புரையாற்றிய கே.பாலகிருஷ்ணன்,
"தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணிதான் ஆட்சிக்கு வந்திருக்கும். மதவெறி சக்திகளுக்கு முடிவு கட்டும் வெற்றியாக இந்தியா கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டிருக்கிற மாபெரும் வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. முரண்பாடுகள் இருந்தாலும் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடியவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கூட்டணி கட்சித் தலைவர்கள், நாம் ஆட்சிக்கு வரவில்லையே என்று வருத்தப்பட்டார்கள். கவலைப்படாதீர்கள். நான் சொல்லுகிறேன். நமது முதலமைச்சர் கைகாட்டும் நபர் நாட்டின் பிரதமராக பதவியேற்கிற நாள் விரைவில் வரும். இந்த நம்பிக்கையோடு நாம் பணியாற்ற வேண்டும். தன்னை மட்டுமே முன்னிறுத்தும் மோடியால் கூட்டணி ஆட்சியை அமைத்துவிட முடியாது. இந்த ஆட்சி எப்போது கவிழும் என்பதை சொல்ல முடியாது. 40 நமக்கு உடனே கிடைத்துவிட்டது. நாடு சற்று தாமதமானாலும் கிடைத்துவிடும்.
தமிழ்நாட்டில் இந்த வெற்றிக்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதேபோல தேசிய அளவில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணிதான் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். அந்த ஆணையத்தின் தவறால், தவறிழைத்தவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இப்போது நமக்கு கிடைத்திருக்கும் வெற்றியும் சாதாரண வெற்றியல்ல. மோடி இனிமே நாடாளுமன்றத்தில் வாலாட்ட முடியாது. அவரால் அரசியல் சட்டத்தை திருத்த முடியாது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications