கல்லூரி அதிபரை மேயர் வேட்பாளராக களமிறக்கும் கமல்; கோடிகளில் புரளப்போகும் கோவை அரசியல்!
கோவை: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் சார்பில் கல்லூரி அதிபர் ஒருவரை களமிறக்க கமல் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
கோவை கனியூரில் பார்க் பொறியியல் கல்லூரி நடத்தி வரும் அனுஷா ரவியை, கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரனுக்கு மாற்றாக கொண்டு வர முயற்சிக்கிறார் கமல்.
திமுக, அதிமுக வேட்பாளர்களுடன் மோதுவதற்கு பொருளாதார ரீதியாக அனுஷா ரவி பொருத்தமாக இருப்பார் என்பது கமலின் கணிப்பு.

நேரடி? மறைமுகம்?
நகராட்சித் தலைவர், மேயர் பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுமா அல்லது மறைமுகத் தேர்தல் நடத்தப்படுமா என்பது இன்னும் தெளிவுப்படுத்தாத நிலையில், இப்போதே இரண்டுக்கும் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்குவதற்கான வேட்பாளர் தேர்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கட்சியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் இப்போது வெளியேறிவிட்டதால் கமலுக்கு இது சவாலான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.

வாக்குவங்கி
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் குறிப்பிட்ட 10 மாநகராட்சிகளில் மட்டும் போட்டியிடுவது பற்றியும் கமல் ஆலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, என முக்கிய மாநகராட்சிகளிலேயே வேட்பாளர்களை தேடி பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாலும், ம.நீ.ம.வுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாலும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் கமல் ஸ்பெஷல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறாராம்.

கமல் போட்டி
மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரனுக்கும் தனக்குமான போட்டியாக கோவை மேயர் தேர்தலை அவர் கருதுகிறாராம். இதனால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமை வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ள கமல், கல்லூரி அதிபர் அனுஷா ரவியின் பெயரை டிக் செய்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஏற்கனவே திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

மக்களிடம் அறிமுகம்
கோவையை பொறுத்தவரை ரோட்டரி சங்கம் உள்ளிட்ட ஏராளமான தன்னார்வலர்கள் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து ஏதேனும் ஒரு நலத்திட்டங்களை செய்து வருவதால் அனுஷா ரவிக்கு மக்கள் மத்தியில் ஓரளவு அறிமுகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேரடித் தேர்தல் இருக்கும்பட்சத்தில் மட்டுமே அனுஷா ரவி மேயர் வேட்பாளராக களமிறங்க முன் வருவார் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் மறைமுகத் தேர்தலாக இருப்பின் அவர் போட்டியிட முன்வரமாட்டார் எனவும் கூறுகிறாகள் உள் விவரமறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications