விக்ரமுக்கு கூடும் கூட்டம் மநீமவுக்கு கூடாதா? "அவங்களே கூப்பிடுறாங்க”.. கமல்ஹாசன் பேசியது என்ன?
கோவை: கோவையில் இன்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றெல்லாம் கமல் பேசியிருப்பது, அவர் 'இந்தியா' கூட்டணியில் இணைய உள்ளதைக் காட்டுகிறது என்கிறார்கள்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, கோவை தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக கமல்ஹாசன் அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, திமுக அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியில் இணைவது பற்றியும் கமல்ஹாசன் சூசகமாகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

மீட்டிங்கில் கமல் பேச்சு: இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள். அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல. சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியுமோ பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது. பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் எனக் கூறியுள்ளாராம்.
மேலும் பேசிய கமல், நாடாளுமன்ற தேர்தலை மத்திய அரசு சீக்கிரம் நடத்தப்போகிறது. கடந்த தேர்தலில் ஜெயித்திருந்தால் இன்று நான் எம்எல்ஏ. இல்லையென்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாக கூடாது. எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள்.

சென்னையில் நில்லுங்கள் என அழைக்கிறார்கள். இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். கலைஞர் என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரஸ் என்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் பேசியதாக உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 ஆயிரம் பேர் வேண்டும்: மேலும், கோவையில் 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாருங்கள் எனக் கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேரை தயார் செய்ய வேண்டும். விக்ரமுக்கு கூட்டம் சேர்ந்தது. மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? தலைவனால் இயலாததை தொண்டனிடம் சொல்லக் கூடாது. உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன்.

எனக்கு மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன். உண்மை தோற்றிருக்கக் கூடாது என திமுக நிர்வாகி ஒருவர் சொன்னார். தேர்தலில் 40 இடங்களிலும் நீங்கள் வேலை செய்ய தயாராக வேண்டும். நல்ல தலைமை தமிழ்நாடு முழுவதற்கும் வர வேண்டும். நமது அஜாக்கிரதையினால் நாம் பலியாகிவிடக் கூடாது.
ஊர் கூடி தேர் இழுப்போம்: ஒருவர் மட்டும் தனியாக தேரை இழுக்க முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். நேர்மைக்கு எல்லா இடங்களிலும் மரியாதை உள்ளது. அவர்களே நம்மை அழைப்பார்கள். அழைப்பிதழ் அச்சடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முதியவர்கள், புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும். என்னை தலைவன் என நம்புபவர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் வேலியாக இருக்க கூடாது. ஏணியாக இருக்க வேண்டும்.
கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை. உறவு நிரந்தரம். வேலை செய்தால் தான் பதவி நிரந்தரம். ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரம். அதற்கு எதிராக 'இந்தியா' வெகுண்டு பேசுகிறது. ஒரே தேர்தல், ஒரே தலைமை, என்பதை ஏற்க முடியாது. அரசியல் என்றால் சூதுவாது இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள கூடாது. வெறி பிடிக்காமல் இருக்க அன்பு ஒன்று மருந்து. அன்பு ஒன்று தான் எனக்கு தெரிந்த மதம். அதைவிட பெரிய மதம் மனிதம் என கமல்ஹாசன் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications