கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை.. திடீரென யூடர்ன் அடித்த ரஞ்சித்.. காரணம் என்ன?
கோவை: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கு மிரட்டல் வருவதாக கூறிய ரஞ்சித், கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் 'சிந்துநதிப் பூ' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனராகவும் மாறி ஒரு படத்தை இயக்கினார். பீஷ்மர் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

அதன்பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் நடித்தார். தொடர்ந்து தற்போது ரஞ்சித் 'கவுண்டம்பாளையம்’ என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியது. கவுண்டம்பாளையம் படத்தின் டீசரில் மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தியிருப்பதாகவும், விசிக தலைவர் திருமாவளவனை தாக்கி பேசியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியாகாது என ரஞ்சித் அறிவித்துள்ளார். கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று(வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அந்த படத்திற்கு எதிர்ப்பு வருவதாகவும், தனக்கு மிரட்டல் வருவதாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் ரஞ்சித் நேற்று நேரில் சென்று புகார் அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், "வெள்ளிக்கிழமை(ஜூலை 5ம் தேதி) திரைக்கு வரவிருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது, படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினையும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்க உள்ளேன்.
கவுண்டம்பாளையம்படம் வெளியிடக் கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் என்னிடம் சொல்லிய போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாடக காதலை பற்றியும், நாடக காதலால் பெற்றோருக்கு ஏற்படும் வலியையும் படமாக எடுத்துள்ளேன்.
கவுண்டம்பாளையம் படத்திற்கு சில இடங்களில் இருந்து எதிர்ப்பு வருவது வருத்தமளிக்கிறது. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை தான். நான் பொய் கூற மாட்டேன். நான் அரசியல்வாதி இல்லை. மேலும், இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதிலாக இருக்கும்
சென்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் இப்போதுவெளியிட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. யார் எதிர்க்கிறார்கள் என்று இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். எனவே தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பு கருதி படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்திருக்கிறோம்.
தமிழக அரசின் அனுமதி பெற்று கவுண்டம்பாளையம் படத்தை விரைவில் வெளியிடுவோம். படத்தின் வெளியீட்டு நாளின் போது பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வதற்காகத்தான் இந்த ஒத்திவைப்பு செய்திருக்கிறோம். கருத்து சுதந்திரம் இருக்கும் உள்ள நமது நாட்டில் நல்ல கருத்துள்ள படத்தை எடுத்து வெளியிட முடியாமல் போவது வேதனையாக இருக்கிறது" இவ்வாறு நடிகர் ரஞ்சித் கூறினார்.












Click it and Unblock the Notifications