கோவையில் பரபரப்பு.. மேலும் ஒரு சிலிண்டர் வெடிப்பு! படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி
கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் விஜய் என்பவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது வீட்டில் இன்று காலை திடீரென சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜய்க்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
படுகாயமடைந்த விஜய் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கோவையில் கடந்த மாதம் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை வெடிப்பு
இன்று வரை அது தொடர்பான விவாதங்களும், அரசியல் விமர்சனங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை
இது பற்றி தகவலறிந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது. ஜமேஷா முபின் ஓட்டிவந்த சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

வெடிமருந்து
இதற்கு முன் இந்த கார் 10 பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரியவந்தது. அந்த காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும் டிஜிபி கூறி இருக்கிறார். ஜமேஷ் முபினின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சதி வேலையா?
இந்த சம்பவம் விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டது. இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர் என்பதால் இந்த விவகாரம் அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.

என்.ஐ.ஏ விசாரணை
இந்த நிலையில் 6 பேரை கைது செய்த போலீசார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் வீட்டில் நிகழ்ந்துள்ள சிலிண்டர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications