என்ன ஹேமா இதெல்லாம்? யூடியூப் சப்ஸ்கிரைபர் தலையில் மிளகாய் அறைத்த “மாடர்ன் பெண்”! கோவை தம்பதி கைது
கோவை: யூடியூப் சேனல் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமான தம்பதி தங்கள் சப்ஸ்கிரைபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் ரமேஷ். கணவனும் மனைவியும் சேர்ந்த யூடியூபில் மாடர்ன் மாமி என்ற பெயரில் யூ டியூப் சேனலை நடத்தி வந்திருக்கின்றனர். இந்த சேனலில் ஹேமா ஆடைகள், நகைகள், மேக்கப், அழகு சாதன பொருட்கள் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்து உள்ளார்.

இவரது யூடியூப் சேனலுக்கு சுமார் 1.5 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதுவரை 595 வீடியோக்களை இவர் வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில் ஹேமாவும் அவரது கணவர் ரமேஷும் தங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர்களிடம் 200 ரூபாய் முதலீடு செய்தால் 300 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இவர்களை பேச்சை அப்படியே நம்பிய அப்பாவி சப்ஸ்கிரைபர்கள் பலர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் பணம் செலுத்திய சப்ஸ்கிரைபர்களுக்கு இந்த யூடியூப் தம்பதி பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பன்னிமடை என்ற பகுதியை சேர்ந்த ரமா என்பவர் காவல் நிலையத்தில் ஹேமா மற்றும் அவரது கணவர் மீது புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் யூடியூப் தம்பதி 44 பேரிடம் இதுபோல் பணம் வசூலித்து ரூ.41.88 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. மொத்தமாக ஒன்றரை கோடி வரை தம்பதி மோசடி செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹேமா தனது கணவர் ரமேஷுடன் தலைமறைவானார்.
அவர்களை தேடி வந்த போலீசார், ஹேமா, ரமேஷ் மற்றும் யூடியூப் சேனல் கேமராமேன் அருணாசலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 45 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ஸ்கூட்டர், யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் கோவை சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications