நேரம் பார்க்காம ஓடி உதவினாரே சந்தோஷ்.. மீட்கும்போது சீண்டிய நாகராஜன்.. கோவையில் யாருமே எதிர்பார்க்கல
கோவை: கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, காலநேரம் பார்க்காமல் ஆயிரக்கணக்கான பாம்புகளைக் காப்பாற்றி பத்திரமாக வனப்பகுதியில் விட்டு பாதுகாத்தவர் சந்தோஷ்.. 15000-க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு பொதுமக்களையும் காப்பாற்றி, அந்த பாம்புகளையும் பாதுகாத்துள்ளார்.. எனவே, சந்தோஷின் குடும்பத்துக்கு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.. 39 வயதாகிறது.. இவர், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியை செய்து வருகிறார். பல வருடங்களாகவே, பல்வேறு பகுதியில் நுழைந்த கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் விடுவிப்பது இவரது வழக்கமாகும்.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் வந்தது.. உடனே சந்தோஷ், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்த நாகபாம்பினை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நாகப்பாம்பு அவரை கடித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை
இதனால் மயக்கம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தோஷ் கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகும் பல பாம்புகளை பிடித்துள்ளார்.. அதிலும் விஷ பாம்புகளை ஏராளமாக பிடித்திருக்கிறாராம். ராஜநாகம், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார் சந்தோஷ்..
ராஜநாகம் - கொடிய விஷம்
சம்பவத்தன்று, சந்தோஷ் பிடிக்க சென்ற பாம்பு கடுமையான விஷமுள்ள ராஜ நாகமாகும். எனினும், அதை லாவகமாக பிடித்து மீட்கும் நேரத்தில்தான், எதிர்பாராமல் அவரை கொத்திவிட்டது. கை, கால்களில் பாம்பு கொத்திவிட்டதால், உடலில் விஷம் ஏறி, அங்கேயே மயக்கம்போட்டு விழுந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
சந்தோஷூக்கு 39 வயதாகிறது.. திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்களாம்.. அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி... சந்தோஷின் ஒரே வருமானத்தில் தான் அந்த குடும்பம் இயங்கி வந்துள்ளது.
அரசுக்கு கோரிக்கை
எப்படியும் அவர் பிழைத்துவிடுவார் என்றுதான் குடும்பத்தினர் நம்பிக்கையாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த இழப்பை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.. சந்தோஷின் மரணம் பாம்பு பிடி வீரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டுபண்ணி வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சந்தோஷ் காலநேரம் பார்க்காமல் ஆயிரக்கணக்கான பாம்புகளைக் காப்பாற்றி பத்திரமாக வனப்பகுதியில் விட்டிருக்கிறாராம்.. அதாவது 15000-க்கும் மேற்பட்ட மீட்டு பொதுமக்களையும் காப்பாற்றி, அந்த பாம்புகளையும் பாதுகாத்துள்ளார்.. அதனால், சந்தோஷின் குடும்பத்துக்கு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications