அதிமுகவுக்கு ஷாக்... த.மா.கா.வில் இருந்து விலகினார் கோவை தங்கம்- வால்பாறையில் சுயேட்சையாக போட்டி!
வால்பாறை: ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்ப் போவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோவை தங்கம் அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தியவர் கோவை தங்கம். வால்பாறை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது. இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்தார். அத்துடன் புதன்கிழமையன்று முக்கிய முடிவை அறிவிப்பேன் என்றும் கோவை தங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார் கோவை தங்கம். அத்துடன் வால்பாறை சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என்றும் கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.
வால்பாறை தொகுதியானது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் மாஜி எம்.எல்ல்.ஏ. ஆறுமுகம் போட்டியிடுகிறார். கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் 2001, 2006-ல் வேட்பாளராக இருந்தவர். இப்போது கோவை தங்கமும் போட்டியிடுவதால் வால்பாறை தேர்தல் களம் மிக கடுமையானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications