தயாநிதி மாறனின் "பிராமணர்கள் மொழி".. நிர்மலா சீதாராமனை இப்படியா கேலி செய்றது? கோவையில் கொதித்த வானதி
கோவை: மத்திய நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் தாக்கி பேசுகிறார்கள்.. சமூக நீதி பேசும் திமுகவினர் இதைச் செய்வது சரியல்ல என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் காட்டமாக கூறியிருக்கிறார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பேசினார்.. அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. செய்தியாளர்களிடம் வானதி சொன்னதாவது:

சிறப்பு சிகிச்சை: ''கோவை மட்டுமல்லாமல், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.. ஆனால், இங்கு மக்கள் காத்திருப்பதற்கான இட வசதி முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக, பிரசவ வார்டு அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருப்புக் கூடம் அமைக்க ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தில் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இப்போது வரை முழுமையாக செயல்படவில்லை. எனவே இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தந்திருக்கிறோம்.
ஊழல் பெருகிவிட்டது: தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் பெருகி உள்ளது. ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பை மாநிலங்களே மேற்கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் மற்றொரு மாநிலத்தில் குறைவாக இருக்கும். எனவே, மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். திமுக அரசுக்கு தைரியம் இல்லாததால் இதை செய்யாமல் இருக்கிறார்கள்.. இதை பற்றி திரும்ப திரும்ப மத்திய அரசிடம் கேட்பது என்பது பொறுப்பை தட்டிக் கழிப்பது போன்றது.
ராகுல் காந்தி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுவது மரபு சார்ந்த விஷயமாக இல்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு பதிலாக தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் இருந்து தேர்வான எம்பிக்களும் தனிமனித தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அரசியல் என்பது ஆளுகின்ற கட்சியை விமர்சிப்பது, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்பது என்பவை எல்லாம் இருந்தால் கூட தனிப்பட்ட தரம் தாழ்ந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.
தயாநிதி மாறன்: முக்கியமாக, மத்திய நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் தாக்கி பேசுகிறார்கள்.. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிராமணர்கள் குறித்து விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார். சமூக நீதி பேசும் திமுகவினர் இதை செய்வது சரிகிடையாது..
பிராமணர்கள் பேசும் மொழியை குறிப்பிட்டு கேலி பேசுவது, பிராமணர்கள் பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக தரம் தாழ்ந்த விமர்சனத்தை தயாநிதி மாறன் தொடர்ந்து செய்து வருகிறார்.. நாங்களும் அவரது மனைவி, அவர் பேசுகின்ற மொழி குறித்து பேசினால் நன்றாக இருக்காது.. பிராமணர்கள் பேசும் மொழியை கேலி செய்து பேசுவது திமுக மற்றும் திராவிடர் கழகத்தை சார்ந்தவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது..
உதயநிதி: கோவை முன்னாள் மேயர் காலகட்டத்தில் ரூ. 27 லட்சம் டீ செலவு காண்பிக்கப்பட்டது குறித்து, கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்க வரும் அமைச்சர் உதயநிதி பதிலளித்தால், கொஞ்சம் நன்றாக இருக்கும்'' என்றார் வானதி சீனிவாசன்.












Click it and Unblock the Notifications