இது புதுசா இருக்கே.. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி முடிவு.. போலீசுக்கு பறந்த உத்தரவு
கோவை: கோவை மாநகர பகுதியில் வசிக்கும் மக்களே, போக்குவரத்து விதிகளை மறந்தும் மீறிவிட வேண்டாம். ஏனெனில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து போலீஸ் தான் பிடித்தார்கள். இனி சட்டம் ஒழுங்கு போலீசாரும் உங்களை பிடிப்பார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய நகரம் என்றால் அது கோவை தான். கோவை மாநகரம் மற்றும் கோவையின் புறநகர் பகுதியில் சுமார் 40 லட்சம் மக்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையை போல் கோவை இன்னும் பல பகுதிகளில் முழுமையாக நகரமயமாகவில்லை.. அதேநேரம் தென்னிந்தியாவில் உள்ள இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை மிக வேகமாக வளரும் நகரமாக உள்ளது.

ஏற்கனவே பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்ட கோவையில் ஒரே குறையாக இருந்தது ஐடி நிறுவனங்களின் குறைவான வருகை தான். அதுவும் கொரோனாவிற்கு பிறகு மாறி உள்ளது. பல ஐடி நிறுவனங்கள் கோவைக்கு வந்துவிட்டன. மேலும் ஏராளமான ஐடி நிறுவனங்கள் விரைவில் வர உள்ளன. இதேபோல் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது கிளையை கோவையில் தொடங்க ஆர்வமாக உள்ளன. இதனால் அடுத்த 10 வருடங்களில் கோவை மாநகரில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் மக்கள் தொகையும் அதிகரிக்கும் என தெரிகிறது.
தற்போதைய நிலையில் கோவையில் வாகன நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதேபோல் பலர் போக்குவரத்து விதிகளை மீறுகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. இதையடுத்து கோவை மாநகர பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரின் உத்தரவின் பேரில், போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படியே கோவை மாநகரம் முழுவதும் தினமும் பல்வேறு நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இரவிலும் மது அருந்திவிட்டு செல்பவர்களை பிடிக்க வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல் சிக்னலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வைத்தும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் கோவையில் விபத்துகள் அதிகமாக நடக்கும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் செல்வது, கார்களில் சீட்பெல்ட் அணியாமல் செல்வது, அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். . இந்த பணியில் தற்போது வரை போக்குவரத்து போலீசார் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்காக கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் அபராதம் விதிக்கும் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த கருவிகள் மூலம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தந்த பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை தீவிரமாக்கினால் விபத்துகள் குறையும் என்றும், குற்ற சம்பவங்களும் குறையும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications