450 ரூபாயாம்! லியோ டிக்கெட் மட்டும் தரமாட்டாங்களாம்.. கோக், பாப்கார்ன்னு காம்போவாம்! அநியாயம்!
கோவை: லியோ திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என கோவை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தும் ஒரு தியேட்டரில் ரூ 450 க்கு லியோ டிக்கெட் விற்பனையாவதாக ரசிகர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்காக தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. திரையரங்கில் பால்கனி டிக்கெட்டிற்கு விலை ரூ 200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ 200 டிக்கெட்டுடன் குளிர்பானங்கள், பாப்கார்ன் என காம்போவாக ரூ 450க்கு விற்பனை செய்யப்படும் என தியேட்டர் ஊழியர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
கோவையில் உள்ள கே.ஜி. திரையரங்கில்தான் இந்த அநியாயம் நடக்கிறது என ரசிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் திரையரங்க ஊழியர் ஒருவர் காம்போ ஆபரில் ரூ 450 க்கு டிக்கெட் தருவோம் என்கிறார். அதற்கு அந்த நபர் காம்போன்னா என்னங்கணா என கேட்கிறார்.
கோக் அல்லது பெப்சி, பாப்கார்ன் தருவோம் என்கிறார். டிக்கெட் மட்டும் தர முடியுமாண்ணான்னு அந்த நபர் கேட்க அதற்கு திரையரங்க ஊழியரோ ஆங் முடியாது என்கிறார். மேலும் தனி டிக்கெட் வேண்டும் என்றால் 700 ரூபாய் ஆகும் என்கிறார். அதற்கு என்னங்கண்ணா 190 ரூபாய்தானே என கேட்டதற்கு மால்களில் ரூ 1500 க்கு டிக்கெட் விற்பனையாகிறது என்கிறார்.
இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. டிக்கெட் விலையை கூடுதலாக விற்கக் கூடாது என கோவை ஆட்சியர் தனது செய்திக் குறிப்பு மூலம் உத்தரவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்துக்கு வருகிற 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணிவரை காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் தமிழ்நாடு சினிமா ஒழுங்கு முறை விதிகளின்படி புதிய திரைப்படங்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிடும்போது சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்டநெரிசலை சரியாக கையாள வேண்டும். வாகனம் நிறுத்தும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.
மேலும் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணத்தை பார்வையாளரிடம் வசூலிக்கக்கூடாது. வாகன நிறுத்த கட்டணமும் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை திரையரங்குகள் மீறினால் இதுகுறித்து பொதுமக்கள் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை கேஜி சினிமாஸில் எடுக்கப்பட்ட வீடியோ குறித்து தகவலறிந்த ஆட்சியர் கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் விற்கும் நபர்களை பிடித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications