கோவை லோக்சபா தொகுதி:முட்டி மோதும் பாஜகவின் முப்பெருந்தலைகள்- சைலண்ட்டாக வேடிக்கை பார்க்கும் அதிமுக!
கோவை: கோவை லோக்சபா தொகுதியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்பதில் பாஜகவின் மூன்று பெருந்தலைகள் முட்டி மோதுகின்றனராம். சிட்டிங் எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நானும் போட்டியிட தயார் என மல்லுக்கட்டுவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம் டெல்லி மேலிடம்.
தமிழகத்தில் மிக சென்சிட்டிவ்வான தொகுதிகளில் ஒன்று கோவை லோக்சபா தொகுதி. பொதுவாக தமிழக லோக்சபா தொகுதிகள் திமுக, அதிமுக ஆகியவற்றின் கோட்டைகளாக இருக்கும். ஒன்றிரண்டு தொகுதிகளில் காங்கிரஸ், இடதுசாரிகள் செல்வாக்குடன் இருக்கும். இந்த கட்சிகள் கூட்டணி வாக்குகளுடன் வெல்வது வழக்கம். இதுதான் தமிழக அரசியலின் பார்முலா. இது பாஜகவுக்கும் பொருந்தக் கூடும்.

கோவை லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாத தொகுதி. ஏனெனில் இந்த தொகுதியில் திமுகவும் வென்றுள்ளது; அதிமுகவும் ஜெயித்துள்ளது; காங்கிரஸும் வாகை சூடியிருக்கிறது; இடதுசாரிகளும் கோலோச்சி இருக்கின்றனர்; பாஜகவும் கூட ஜெயித்திருக்கிறது. அதாவது தமிழகத்தின் அத்தனை பிரதான கட்சிகளும் வென்றிருக்கக் கூடிய தொகுதி இது.
கோவை லோக்சபா தொகுதிக்குள் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. பாஜகவின் வானதி சீனிவாசன்.
அண்மையில் பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வருகை தந்திருந்தார். கோவை வருகை தந்த ஜேபி நட்டாவிடம் பாஜக தலைவர்கள் கோவை லோக்சபா தொகுதி நிலவரம் குறித்து ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அதிமுகவின் ஆதரவுடன் கோவை லோக்சபா தொகுதியில் நாம் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அந்த ரிப்போர்ட்டுகளின் சாராம்சமாக இருந்ததாம். அத்துடன் பாஜகவின் மிக முக்கியமான 3 தலைவர்களும் இந்தத் தொகுதியில் தாம் நின்றால் எப்படி வெல்வது எளிதாக இருக்கும் என விவரித்தும் இருந்தனர். இவர்களில் ஒருவர் சிட்டிங் எம்.எல்.ஏ. என்கின்றனர் பாஜக வட்டாரங்கள். இருந்த போதும் ஜேபி நட்டாவோ, 3 பேரின் விருப்பங்களையும் கேட்டுக் கொண்டு எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பிய சீனியர், இனி எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது; இதனால் அனேகமாக எனக்கு இது கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம். ஏற்கனவே என்னுடைய செல்வாக்கை நிரூபித்திருக்கிறேன் என ஆணித்தரமாக வாதிட்டாராம். மற்றொரு பிரமுகரோ, கோவையை மையமாக வைத்துதான் பதவி கொடுத்தது முதலே செயல்பட்டு வருகிறேன். ஆகையால் மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என்றாராம். இப்போது கோவை பாஜகவில், யாருக்கு கிடைக்கும் தொகுதி என்பதுதான் ஹைலைட் விவாதமாம். இன்னொரு பக்கம் பாஜகவினரின் இந்த மூவ்களை அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறதாம் அதிமுக.
கோவை தொகுதியில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளுக்கும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அதேநேரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவின் செல்வாக்கு சற்று கூடுதலானது. இத்தொகுதியில் திமுக 2 முறையும் அதிமுக ஒரே ஒரு முறையும்தான் வென்றுள்ளது. அதாவது தமிழக மாநில கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மொத்தமே 3 முறைதான் வென்றிருக்கின்றன. ஆகையால் கோவையை கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன இந்த இரு கட்சிகள்.
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் இரண்டும் உள்ளன. ஆகையால் இரண்டில் ஏதேனும் ஒரு கட்சிக்கு கோவை லோக்சபா தொகுதியை திமுக தலைமை தள்ளிவிடக் கூடும். அதேநேரத்தில் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதால், திமுகவே இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications