கோவையில் பீரோவை திறந்தால் அவ்வளவும் தங்க நகை.. சலனப்பட்ட சகாயமேரி.. வேலைக்கார பெண் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை காந்திமாநகர் விளாங்குறிச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வி என்பவரது வீட்டில் 50 பவுன் தங்க நகையை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.. அவர் ஏன் நகையை திருடினார் என்பது குறித்தும், எப்படி திருடினார் என்பது குறித்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலைக்கார பெண் இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தை பார்ப்போம்.

இன்றைக்கு தங்க நகை ஒரு பவுன் 63 ஆயிரம் ரூபாய்க்கு போய்விட்டது. செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒரு பவுன் நகை வாங்க 70000 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாக தங்க நகைகளை திருடுவதும் முன்பைவிட அதிகரித்து வருகிறது.

coimbatore gold jewellery

ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் விட்டு திருடுவது அதிகரித்து வருகிறது. அதேநேரம் நன்றாக பழக்கம் ஆனவர்கள் கூட சபலத்தால் விழுந்து பக்கத்து வீடுகளில் நகை பணத்தை திருடுகிறார்கள். ஒரு சில வேலைக்கார பெண்களும் தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் தங்க நகைகளை திருடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.. அப்படி நகை திருடிய பெண் கோவையில் சிக்கியுள்ளார்.

கோவை காந்திமாநகர் விளாங்குறிச்சி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி (வயது 70). செந்தமிழ்செல்வி தனது மூத்த மகன் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார்.செந்தமிழ்செல்வி பெருமாள் தம்பதியின் மகன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அண்மையில் செந்தமிழ்செல்வியின் மருமகளுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து செந்தமிழ் செல்வி தன்னிடம் இருந்த 51 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சத்தை பீரோவில் வைத்து பூட்டி சாவியை வேறு இடத்தில் வைத்திருக்கிறார்.

இதனிடையே செந்தமிழ்செல்விக்கு தனது மருமகளின் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் பீரோவில் இருக்கும் நகையை அடகு வைத்து பணம் பெற முடிவு செய்திருக்கிறார். இதனால் பீரோவை திறந்து நகையை எடுக்க சாவியை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடியும் சாவி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவின் பூட்டை உடைக்க முடிவு செய்திருக்கிறார்.

இதனால் அவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் பீரோவை உடைத்து உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த 51 பவுன் நகை மற்றும் பணத்தை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.35 லட்சத்துக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தமிழ் செல்வி, நகை திருட்டு போனது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வரும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த 47 வயதாகும் சகாயமேரி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார் இதையடுத்து போலீசார் செந்தமிழ் செல்வி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு சென்று பீரோவில் பதிவான ரேகைகளை பதிவு செய்து பார்த்தார்கள். தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் வேலை செய்து வரும் சகாயமேரியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார். இதனால் சந்தேகத்தை உறுதி செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் சகாயமேரி தான் தங்க நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சகாயமேரியை கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் எங்கு உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசாரிடம் சகாயமேரி வாக்குமூலம் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த சகாயமேரி, கோவையில் உள் செந்தமிழ் செல்வி வீட்டில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார். சகாயமேரிக்கு மிக அதிகமாக கடன் இருக்கிறதாம். மகளிர் சுயஉதவிக்குழுவில் அதிகமாக கடன் வாங்கிவிட்டு அதை அவர் திரும்ப செலுத்தவில்லையாம்.

சகாயமேரிக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக கடன் இருந்து உள்ளது. கடன் கொடுத்தவர்கள் சகாயமேரியிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார்களாம். இதனால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்த நிலையில்தான், செந்தமிழ் செல்வி தனது நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து பூட்டியதை சகாயமேரி அண்மையில் பார்த்தாராம்.

எனவே அந்த நகை-பணத்தை நைசாக திருடி அதை விற்று கடனை அடைப்பது என்று முடிவு செய்துவிட்டாராம் சகாயமேரி. இதற்காக அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ சாவியை எடுத்து, அதில் இருந்த நகை-பணத்தை திருடிவிட்டு பீரோ சாவியை தூக்கி வீசிவிட்டாராம். பின்னர் ஊருக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று அதை விற்று பணத்தை திரட்டினாராம் இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து தங்க நகையை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+