கோவையில் பெண்களை வீடியோ எடுத்த நபர்.. போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.. விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை மாநகரில் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் தனது செல்போனில், அந்த வழியாகச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள், அவர் யார் என்று விசாரிக்குமாறு வலியுறுத்தினர். அப்படி போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் ஒரு காவலர் என்பது தெரியவந்தது. அவர் போக்குவரத்து பிரிவில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது
கோவை மாநகரம் சாய்பாபா காலனி பஸ் ஸ்டாப் அருகே நேற்று இரவு ஒரு நபர் தனது செல்போனில், அந்த வழியாகச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக கவனித்து வந்தார்கள். பின்னர், அந்த நபரைப் பிடித்து, எதற்காக வீடியோ எடுக்கிறாய் எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்படட நபரோ, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாராம். வீடியோ எடுப்பது குறித்து பதில் அளிக்கவில்லையாம்.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், அவரை பிடித்து கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, சாய்பாபா காலனி போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பாலமுருகன் என்பதும், போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள், மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள வீடியோ என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள். கோவையில் பெண்ணை வீடியோ எடுத்த நபர் போலீஸ்காரர் என்ற விஷயம் காட்டுத்தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பல்வேறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேறுவேறு இடங்களுக்கு பணியிட மாற்றம்: கோவை மாநகர கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் தேவி, போத்தனூர் புலனாய்வு பிரிவிற்கும், இளங்கோவன் சிங்காநல்லூர் சட்டம், ஒழுங்கு பிரிவிற்கும், ராமச்சந்திரன் மாநகர குற்றப்பிரிவு 2-க்கும் சண்முகவடிவு கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதேபோல் கோவை பீளமேடு இன்ஸ்பெக்டர் தமிழரசு குனியமுத்தூர் புலனாய்வு பிரிவிற்கும், சிங்காநல்லூர் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வினோத்குமார் சுந்தராபுரம் சட்டம், ஒழுங்கு பிரிவிற்கும், சுந்தராபுரம் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி, உக்கடம் புலனாய்வு பிரிவிற்கும், செல்வபுரம் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பீளமேடு புலனாய்வு பிரிவிற்கும், போத்தனூர் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வி, சாய்பாபா காலனி புலனாய்வு பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்ட எஸ்.பி. இன்ஸ்பெக்டர் அழகுராஜ், கோவை மாநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications