விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம்.. கோவையில் போராட்டத்தில் குதித்த மா.கம்யூனிஸ்ட்
கோவை: விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் போராட்டம் நடத்தினர்.
விவசாய விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் 13 மாவட்ட விவசாயிகள், 12வது நாளாக, காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்பட உள்ளதால் கொங்கு மண்டலமே உக்கிரமாகி உள்ளது.
உயரழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனனர்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கோவைக்கு வருகை தந்தார். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அவர் சுல்தான்பேட்டை பகுதியில் வைத்து், முன்கூட்டியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். போராட்ட பந்தலுக்கு உங்களை அனுமதிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் போலீசார் தெரிவித்தனர்.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது.