கோவையில் நடந்த சந்திப்பு? ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரி விகே பாண்டியன்- சுஜாதா தம்பதி திட்டம் என்ன?
பாட்னா: ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி படு தோல்வியை சந்தித்ததையடுத்து அரசியலில் இருந்து விலகுவதாக விகே பாண்டியன் அறிவித்த நிலையில், அவரது மனைவி சுஜாதா கார்த்திகேயனும் விருப்ப ஓய்வு பெற்று இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவை ஏர்போர்ட்டில் நவீன் பட்நாயக்கும் விகே பாண்டியனும் தென்பட்ட காட்சிகள் வெளியான சில நாட்களில் விருப்ப ஓய்வு பெற்று இருக்கிறார் சுஜாதா.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். ஒடிசா முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவராக இருந்தார். நவீன் பட்நாயக்கின் வலது கரமாகவே ஆட்சி நிர்வாகத்தில் திகழ்ந்த விகே பாண்டியன், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

வேறு துறைக்கு மாற்றப்பட்ட சுஜாதா
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நவீன் பட்நாயக்கிற்கு தேர்தல் பணிகளில் முழு மூச்சாக உடன் நின்றார். நவீன் பட்நாயக் கட்சியின் அடுத்த அரசியல் வாரிசு இவரே என சொல்லும் அளவுக்கு இவரது செல்வாக்கு மேலோங்கியிருந்தது. ஆனால், தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக ஆட்சியை பிடித்தது. இதனால் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
விகே பாண்டியனின் மனைவி சுஜாதாவும் ஐஏஎஸ் அதிகாரிதான். பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியின் போது, செல்வாக்குடன் இருந்த இவருக்கு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நெருக்கடிகள் அதிகரித்தன. ஒடிசாவில் பாஜக தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், சுஜாதா வேறு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அந்த பணியில் சேராமல் அவர் 6 மாத விடுப்பு எடுத்தார்.
ஒடிசா அரசியலில் பரபரப்பு
விடுப்புகாலம் முடிந்த பின்னரும் தனது விடுப்பை நீட்டிக்குமாறு அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். எனினும் அந்த கோரிக்கையை ஒடிசா பாஜக அரசு நிராகரித்துவிட்டது. இதனால் அந்த பணியில் அவர் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சுஜாதா அதிரடியான முடிவை எடுத்தார். அதாவது, சொந்த பணி காரணமாக அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
அவரது கோரிக்கையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது. விகே பாண்டியன் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் சுஜாதா ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவரை தொடர்ந்து தற்போது இவரும் விருப்ப ஓய்வு பெற்று இருப்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் மட்டும் இன்றி ஒடிசா அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.
கோவை ஏர்போட்டில் சந்திப்பு?
இதற்கிடையே, விகே பாண்டியன் மனைவி சுஜாதா விருப்ப ஓய்வு பெறுவதற்கு முன்பாக, நவீன் பட்நாயக்கும் விகே பாண்டியனும் கோவை வந்ததாக சொல்லப்படுகிறது. கோவை ஏர்போர்ட்டில் இருவரும் செல்லும் காட்சிகள் வெளியாகின. அங்கிருந்து கேரள பதிவெண் கொண்ட காரில் நவீன் பட்நாயக்கும் விகே பாண்டியனும் சென்றுள்ளனர். யாரையும் சந்தித்தார்களா? அல்லது மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றார்களா என்பது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருக்கும் நவீன் பட்நாயக் திருமணம் ஆகாதவர். தற்போது முதுமையால் அவதிப்படும் நவீன் பட்நாயக், கட்சி நிர்வாகத்திலும் விகே பாண்டியனுக்கு முக்கிய இடம் கொடுத்தார். ஆனாலும், விகே பாண்டியன் தமிழர் என்பதால் அவருக்க்கான மைனஸ் ஆக அமைந்துவிட்டது. ஏனெனில் ஒடிசாவை பொறுத்தவரை மொழி உணர்வு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
அடுத்த பிளான் என்ன?
இந்திய வரலாற்றில் 1905 ஆம் ஆண்டிலேயே தங்கள் மொழிக்காக தனி மாகாணம் கேட்டு இயக்க முன்னெடுத்தது. இந்தியாவில் மொழிவாரி பிராந்தியம் உருவாகவும் முதல் உதாரணமாக அந்த மாநிலமே உள்ளது. இத்தகைய வரலாற்றை கொண்ட ஒடிசாவில், விகே பாண்டியன் சரியான தேர்வாக இருக்க மாட்டார் என நவீன் பட்நாயக் நினைத்து இருப்பதாகவும் இதற்காக சுஜாதாவை வைத்து காய் நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.
24 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்து இருக்கும் நிலையில், இழந்த ஆட்சியை மீண்டும் பெற சுஜாதாவை முன்னிறுத்த நவீன் பட்நாயக் முனைவார் எனவும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications