எதிர் எதிர்துருவங்கள்.. ஒன்றாக களமிறங்கிய செந்தில் பாலாஜி - வானதி சீனிவாசன்.. சபாஷ்.. இதுதான் தேவை!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக ஆய்வு மேற்கொண்டது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களிலும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
அதோடு தமிழ்நாட்டில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மின்வெட்டு
இந்த நிலையில் மழை காரணமாக தமிழ்நாட்டில் எங்கும் மின் வெட்டு ஏற்படாத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கோவை, ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதா என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2-3 நாட்களாக இதற்கான ஆய்வுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோவை
இந்த நிலையில் கோவையில் மழை பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். கோவையில் உள்ள திருச்சி சாலை சுங்கம் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அவர் அங்கு ஆய்வு செய்வதை அறிந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் அவருடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இரண்டு பேரும் ஒன்றாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தனர். வானதி சீனிவாசன் எளிமையாக சுடிதார் அணிந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.

மழை நீர் தேக்கம்
இந்த பகுதியில் மழை நீர் தேங்குவதாக புகார்கள் வந்ததை அடுத்து செந்தில் பாலாஜி நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு இருக்கும் மின் கம்பங்களை ஆய்வு செய்தார். வானதி சீனிவாசன் இதில் செந்தில் பாலாஜியிடம் சில சந்தேங்களை கேட்டார். இதற்கு சம்பவ இடத்திலேயே செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்தார். திமுக - பாஜக இடையே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. முக்கியமாக செந்தில் பாலாஜியை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

செந்தில் பாலாஜி
இருப்பினும் செந்தில் பாலாஜி வானதி சீனிவாசனிடம் நட்பாக ஆய்வு பணிகளை செய்தார். இரண்டு எதிர் எதிர் துருவங்கள் இப்படி ஒன்றாக ஆய்வு பணிகளை செய்தது அப்பகுதி மக்களை வியப்பிற்கு உள்ளாகியது. இக்கட்டான நேரத்தில் இப்படித்தான் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications